எமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை
கவிதை எழுதியோ
கண்ணீர் வடித்தோ..
எம் சோகத்தை
ஆற்றிக் கொள்ளமுடியாது..
உயிரைப் பிரிந்தவனுக்கு
உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்..
தமிழகத்தின் தங்கத் தாரகையே
சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன்
சரித்திரத்தை - நாளைய
சந்ததிகள் வாசிக்கும்..
Advertisement
Advertisement
இன்று எங்களை தொற்றிக்
கொண்ட சோகத்தை
எங்கு தொலைப்பது..
காற்று கூட நிரப்ப முடியாத
வெற்றிடமானது நீ வாழ்ந்த
தமிழகம்..!
உன்னைப் போலவே இப்போது
சுவாசம் தேடி அலைகிறது.
மானுடச் சந்தையில்
விலைமதிக்க முடியாத
உயிர் வாங்கிப் போன
எமனை ஒன்று கேட்கிறேன்..
ஏனடா..
ஒற்றைக் கோப்பையில்
ஒட்டுமொத்தமாய்
ஒரு தேசத்தின்
உயிர் குடித்தாய்
-திருமலை சோமு