FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பகுதி 43 – திருவார்த்தை - 2

அழகிய சடைமுடியைக் கொண்டவன், அனைத்துக்கும் முதல்வன், தேவர்களின் தலைவன், ஆனந்தக் கூத்தாடுபவன்,

6 ஆகஸ்ட் 2025, 5:40 pm IST
பகிர்:

இறைவனின் தன்மைகளைச் சொல்லும் மேலான வார்த்தை என்ற பொருளில் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு.

Advertisement

Advertisement

239

பாடலின்பம்

அணிமுடி ஆதி, அமரர்கோமான், ஆனந்தக் கூத்தன், அறுசமயம்

பணிவகை செய்து படவுஅதுஏறிப் பாரொடு விண்ணும் பரவிஏத்தப்

பிணிகெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன், பெண்பால்உகந்து

மணிவலை கொண்டு வான்மீன் விசிறும் வகைஅறிவார் எம்பிரான்ஆவாரே.

*

வேடுஉருஆகி மயேந்திரத்து மிகுகுறை வானவர் வந்து தன்னைத்

தேடஇருந்த சிவபெருமான் சிந்தனை செய்து அடியோங்கள் உய்ய

ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி, அந்நாள்

ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்புஅறிவார் எம்பிரான்ஆவாரே.

பொருளின்பம்

அழகிய சடைமுடியைக் கொண்டவன், அனைத்துக்கும் முதல்வன், தேவர்களின் தலைவன், ஆனந்தக் கூத்தாடுபவன், ஆறுவகைச் சமயங்களும் தன்னைப் பணியும்படி செய்தவன், இந்த மண்ணும் விண்ணும் போற்றும்படி திகழ்கிறவன், பிறவிப்பிணியைப் போக்குகிறவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளன்,

அத்தகைய பெருமான், (மீனவர் மகளாக அவதரித்த உமையம்மையாகிய) பெண் மீது நேசம்கொண்டு, அவளுக்காகப் படகில் ஏறி, பெரிய சுறா மீனைப் பிடிக்க வலை வீசினான், அவனது அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!

*

மயேந்திரமலையில் வேடனாக உருவெடுத்தவன், குறைகள் மிகுந்த தேவர்களெல்லாம் அருள்வேண்டி அவனைத் தேடும்படி திகழ்ந்தவன்,

அதேசமயம், அடியவர்களாகிய நாம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவன் தன்னுடைய சிந்தையில் வைத்தான், அதற்காக, ஆடக்கூடிய குதிரையின் மீது ஏறி வந்தான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் தலைவன், அனைத்துக்கும் முதல்வன், சிவபெருமான்,

அந்நாளில் (இந்நாளிலும்) எங்கும் உள்ள தனது பக்தர்களையெல்லாம் அவன் ஆண்டுகொண்டான், அந்த அருள்தன்மையை அறிந்தவர் யாரோ, அவரே எம் தலைவர்!

சொல்லின்பம்

அணிமுடி: அழகிய சடைமுடி

ஆதி: முதல்வன்

அமரர் கோமான்: தேவர்களின் தலைவன்

அறுசமயம்: ஆறு சமயங்கள்(சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம்)

பணிவகை: பணியும்படி

படவு: படகு

பார்: பூமி

பரவி ஏத்த: போற்ற

பிணி கெட நல்கும்: பிறவி நோய் கெடும்படி அருள்செய்கிற

பெண்பால் உகந்து: பெண்ணை விரும்பி

மணிவலை: அழகிய வலை

வான்மீன்: சுறாமீன்

விசிறும்: வலையை வீசும்

பிரான்: தலைவன்

வேடு உரு: வேடன் உருவம்

மிகு குறை: குறை மிகுந்த

அடியோங்கள் உய்ய: நாங்கள் பிழைப்பதற்காக

பரிமா: குதிரை

ஐயன்: தலைவன்

ஏடர்களை: அடியவர்களை

இயல்பு: தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments