முகப்பு
இந்த நாளில்...

28.01.1935: உலகில் முதல்முறையாக ஐஸ்லாந்து  கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய தினம் இன்று!

கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும்

Updated On : 28 ஜனவரி 2017, 12:00 am IST
பகிர்:

கருக்கலைப்பு என்பது முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும்.

ஏதேனும் ஒரு மருத்துவக் காரணம் கருதி உண்டாக்கப்படும் கருக்கலைப்பு சிகிச்சைக் கருக்கலைப்பு எனப்படும். பிற காரணங்களுக்காக செய்யப்படும் கருக்கலைப்பு தேர்வுக் கருக்கலைப்பு எனப்படும். பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

கருக்கலைப்பு என்பது நீண்ட வரலாற்றை உடையது. முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், உடற்காயங்களை உண்டாக்குதல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன.

Advertisement

கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களும், பண்பாட்டு நோக்குகளும் உலகம் முழுவதிலும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையிலான விவாதங்கள் உலகம் முழுதும் நடைபெறுகின்றன.

கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ, முதிர்கருவோ மனித உயிருக்குச் சமமானது என்றும், அதனை அழிப்பது கொலைக்குச் சமமானது என்றும் வாதிடுகின்றனர். கருவை வளரவிடுவதும், அழிப்பதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமை என்கின்றனர் கருக்கலைப்பு ஆதரவாளர்கள்.

தற்காலத்தில் வளர்ந்த நாடுகளில், பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டே கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. ஆனாலும், உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர். உலக அளவில், ஆண்டு ஒன்றுக்கு நிகழும் சுமார் 4.4 கோடி கருக்கலைப்புகளில், கிட்டத்தட்ட அரைவாசி பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களாகவே இருக்கின்றன.

மக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை பற்றிய அறிவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்ததன் விளைவாக, அண்மைய ஆண்டுகளில் கருக்கலைப்பு நிகழ்வானது ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அறியப்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசியம் கருக்கலைப்பு செய்ய வேண்டிய நிலையை எண்ணி ஐஸ்லாந்து முதன்முதலாக கருக்கலைப்பை இதே நாளில்தான் சட்டப்பூர்வமாக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.