மாலனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது சிங்கப்பூர் தேசிய நூலகம்!
சிங்கப்பூரில் 6 மாதம் தங்கியிருந்து சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வு ஒன்றினை அவர் மேற்கொள்வதற்கு இந்தக் கௌரவம் வாய்ப்பளிக்கும்.
எழுத்தாளர் மாலனுக்கு "ஆய்வுக் கொடையை' ("ஃபெலோஷிப்') சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கியுள்ளது.
"லீ காங் சியான் ஆய்வறிஞர்' என்ற சிறப்புக் கௌரவத்தை அவருக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் 6 மாதம் தங்கியிருந்து சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வு ஒன்றினை அவர் மேற்கொள்வதற்கு இந்தக் கௌரவம் வாய்ப்பளிக்கும். மேலும், சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, சிங்கப்பூர் தமிழ் எழுத்துக்களில் எப்படி எதிரொலிக்கிறது என்ற ஆய்வினையும் அவர் மேற்கொள்ள உள்ளார்.
2 லட்சம் நூல்களுடன்...: 16 மாடி கட்டடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், 700-க்கும் மேற்பட்ட இதழ்கள், குறுந்தகடுகள், ஒலிப் புத்தகங்களுடன் உலகின் சிறந்த நூலகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் தேசிய நூலகம் விளங்குகிறது. இந்த நூலகத்தை 1960-ஆம் ஆண்டு கொடையாளரும் சீன வணிகருமான "லீ காங் சியான்' நிறுவினார். அவரது பெயரில் "லீ காங் சியான் ஆய்வறிஞர்' என்ற சிறப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.