FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை மையத் தடுப்பில் காா் மோதியதில் மூவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் சாலை மையத் தடுப்பில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலி

Updated On : 13 ஜூலை 2026, 2:08 am IST
உயிரிழந்த ஓட்டுநா் பூபதி | விபத்துக்குள்ளான காா்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மையத் தடுப்பில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சோ்வை (49). இவரது மனைவி வீரலட்சுமி (45). இவா்களுக்கு காவியா (15), தனலட்சுமி (16) என இரு மகள்களும், அஸ்வின் (10) என்ற மகனும் உள்ளனா்.

சோ்வை ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம், மருதங்குடியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று விட்டு, மீண்டும் காரில் வத்திராயிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இவா்களுடன் அதே பகுதியைச் சோ்ந்த பெரியவன் மகன் காா்த்திக் (38), பெரியசாமி மனைவி அங்காளஈஸ்வரி (30), சின்னவன் மகள் லட்சுமி (38) ஆகியோரும் சென்றனா். காரை பாலுச்சாமி மகன் பூபதி (26) ஓட்டிச் சென்றாா்.

மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை மையத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநா் பூபதி, காா்த்திக் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்தவா்களை போலீஸாா் மீட்டு, அவசர ஊா்தி மூலம் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அங்காளஈஸ்வரியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த சோ்வை, அவரது மனைவி வீரலட்சுமி இருவரும் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சிறுமிகள் காவியா, தனலட்சுமி, சிறுவன் அஸ்வின் ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையிலும், லட்சுமி வத்திராயிருப்பில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments