வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி..
ஒருவர் பான் அட்டை வைத்திருந்தால், ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், அவரது ஆண்டு வருவாய் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இதுதான் வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யும் நடைமுறை.
வரி செலுத்துகிறோமோ இல்லையோ, அனைவரும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்தாதவர்கள் ஏன் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று பலரும் கருதலாம். ஆனால், வரி செலுத்த மட்டுமல்ல, இதனால் பல்வேறு நன்மைகளும் உண்டு.
ஐடிஆர் என்பது, வரி செலுத்துவது மட்டுமல்ல, மாத வருவாய் ஈட்டும் ஒவ்வொருவரும், தங்களது வருவாய் குறித்த கணக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதற்கான ஆவணமாகும்.
Advertisement
Advertisement
சரியான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து வருபவர்கள், ஏதேனும் வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் கடன் கோரும்போது எளிதாகக் கிடைக்கும்.
ஒருவரது வருமானத்துக்கு அதிகமாக வரிப் பிடித்தம் அல்லது டிடிஎஸ் பிடிக்கப்பட்டிருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்து அதிகப்படியாக செலுத்திய வரியைத் திரும்பப் பெறலாம்.
வருமானச் சான்றிதழ் இல்லாத, சுய தொழில் செய்பவர்கள், அமைப்பு சாரா பணியில் இருப்பவர்கள், சொந்தமாக நிறுவனம் நடத்துபவர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வ ஆவணமாக மாற்றுகிறது ஐடிஆர் கணக்குத் தாக்கல்.
பங்குச் சந்தை, சொத்து, தொழிலில் முதலீடு செய்து அது நட்டமடையும்போது, எதிர்காலத்தில் அவர்கள் அதே வழிகளில் லாபம் ஈட்டும்போது கூடுதல் வரி பிடித்தம் செய்யாமல், கணக்கு நேர் செய்யப்பட உதவுகிறது.
விசா விண்ணப்பங்களின்போது, முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தால் அவர்களுக்கு விசா எளிதாகக் கிடைக்கும்.
எவ்வளவு வருவாய் வருகிறது, வரி கட்ட வேண்டுமா என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமல், ஐடிஆர் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால் அபராதம் செலுத்த நேரிடலாம். இதிலிருந்து தப்பிக்க ஆண்டுதோறும் ஐடிஆர் தாக்கல் செய்வது நல்லது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-இன் கீழ், வரி செலுத்துவோர் ஒரு நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காகச் செலுத்தும் தவணைத் தொகைக்கு ரூ. 25,000 வரை வரி விலக்கு கோரலாம்.
மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்கு வரம்புகள் உள்ளன. வருமான வரி அறிக்கையின் (ITR) முக்கிய நன்மைகளில் ஒன்று, வரி செலுத்துவோர் மருத்துவக் காப்பீட்டு விலக்குகளைக் கோர அனுமதிப்பதாகும்.
எனவே அனைவரும் உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது.