பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!
ஒரு சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக ஐடிஆர்-யு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒருவர் ஏதோ சில காரணங்களால், தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் அபாயம் உள்ளது.
தற்போதிருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் நடைமுறைப்படி, ஒருவர், ஒரே ஒரு மற்றும் அந்தந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில், 2026 - 27ஆம் ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்யும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். முந்தைய ஆண்டுகளுக்கான வாய்ப்புகள் லாக் செய்யப்பட்டிருக்கும்.
எனவே, வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மறந்தவர்களுக்காகவே அப்டேட்டட் ஐடிஆர் (ஐடிஆர்-யு) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நடைமுறையைப் பயன்படுத்தி, ஒருவர் நான்கு ஆண்டுகள் வரை தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும்.
ஒருவர், இந்த வழிமுறையைப் பின்பற்றி, தவறிய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம். அதாவது, 2022 - 23, 2023 - 24, 2024-25, 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.
அபராதம் செலுத்த வேண்டும்
இந்த அப்டேட்டட் ஐடிஆர் என்பது அபராதம் செலுத்தியே தாக்கல் செய்யும் முறையாகும். அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் செலுத்தும் வரி நிலுவைக்கும் வட்டி கணக்கிட்டு அபராதமாக செலுத்த வேண்டியது வரும். எத்தனை ஆண்டுகள் வரியை செலுத்தவில்லை, வரி எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படும்.