முகப்பு
தினமணி கதிர்

ஆலயம்: தடைகளைக் களையும் தலையாலங்காட்டு நாதர்!

சோழ தேசத்தின் காவிரித் தென்கரைத் தலங்களுள் 93 வது தலமாக விளங்குவது தலையாலங்காடு என்னும் சிவப்பதி. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கும்பகோணம் - திருவாரூர் பேருந்து சாலையில் அமையப் பெற்ற அமைதியா

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:58 pm IST
பகிர்:

சோழ தேசத்தின் காவிரித் தென்கரைத் தலங்களுள் 93 வது தலமாக விளங்குவது தலையாலங்காடு என்னும் சிவப்பதி.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கும்பகோணம் - திருவாரூர் பேருந்து சாலையில் அமையப் பெற்ற அமைதியான கிராமம் இது. குடந்தையிலிருந்து 27 கி.மீ. தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும் அமையப் பெற்றுள்ளது தலையாலங்காடு.

செருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள் இறைவனை உணராது, அவரை அழித்திட தீர்மானித்து, ஆபிசார வேள்வியை நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலை போர்த்தி வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். முயலகனை தன் காலடி கீழே போட்டு அவ்வசுரனின் முதுகில் நர்த்தனம் புரிந்தருளினார். அந்த முயலகன் மீது நாட்டியம் ஆடிய தலமாக இந்த தலையாலங்காடு போற்றப்படுகிறது. மேலும் தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி இறைவன் ஒருவனே என்பதையும் ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கிறதென்பதையும் உணர்த்தி அருள்புரிந்தார்.

Advertisement

Advertisement

திருப்பராய்த்துறை என்பதே தாருகாவனமாகும். இங்கு 48 ஆயிரம் ரிஷிகள் தங்கள் பத்தினிகளோடு வாழ்ந்து வந்தனர். தாருகாவன ரிஷிகளுக்கும் சிவபெருமானுக்கும் உண்டான சண்டையைப் பல தலங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் முயலகன் என்னும் அரக்கன் மீது நடனமாடியதாக இந்தத் திருத்தலம் குறிப்பிடப்படுகிறது.

இவ்வூர் சங்ககாலத்தில் தலையாலங்கானம் என்று போற்றப்படுகிறது.

உயர்ந்த ராஜகோபுரமோ, ஓங்கிய மதில்களோ கிடையாது. இருப்பினும் அருள்மணம் வீசுகிறது. கிழக்கு நோக்கிய நீண்ட ஆலயத்தின் முன்பு தலத்தின் திருக்குளமான சங்க தீர்த்தம் அமையப் பெற்றுள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் நுழைய...முதலில் அம்பாள் சன்னதி தென்திசையை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சன்னதிக்குள் ஸ்ரீ பாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகின்றாள். திருமடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சன்னதியும் இங்குண்டு. சன்னதிக்கு வெளியே சனீஸ்வரர் இங்கு கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றார். நந்திதேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். ஸ்வாமி சன்னதியில் சதுர ஆவுடையார் மீது அற்புதமாய் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர்.

தனியே ஓர் லிங்கம், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோருக்குத் தனித்தனிச் சன்னதிகள் இங்கே உள்ளன. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். ஏனைய கோஷ்டங்களோடு ஆலயம் சிறப்புற்று விளங்குகிறது.

இரண்டு வேளை பூஜைகள் நடக்கும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். பங்குனி 31, 31 மற்றும் சித்திரை மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் சூரிய ஒளிக் கதிர்கள் ஸ்வாமி மீது விழுகின்றன. அப்போது இங்கு ஆலயமே கோலாகலமாக இருக்கும்.

தை மாதம் பிரம்மோற்சவத்தோடு, இதர அனைத்து விசேடங்களும் சிறப்புற நடத்தப்படுகிறது.

இத்தல தீர்த்தமான சங்க தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன் இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட சகல வியாதிகளும் தீரும்.

இத்தல பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட எதிரிகள் நாசமடைவர். இத்தல ஸ்வாமிக்கும், அம்பிகைக்கும் தொடர்ந்து 9 வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட தடைபட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments