பட்டணத்துத் தம்பிரான்!
48 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரம் ஆதீனத்தின் 26 வது மடாதிபதியாகப் பெறுப்பேற்ற ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறந்த தமிழ் ஆர்வலர் மட்டுமல்ல, சிறந்த தமிழறிஞரும், கல்வியாளருமாவா
48 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரம் ஆதீனத்தின் 26 வது மடாதிபதியாகப் பெறுப்பேற்ற ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிகர் ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறந்த தமிழ் ஆர்வலர் மட்டுமல்ல, சிறந்த தமிழறிஞரும், கல்வியாளருமாவார்.
மடாதிபதியாவதற்கு முன்பு திருஞான சம்பந்தர் என்ற பெயர் பெற்றிருந்த அவர் சோம சுந்தர தம்பிரானாக ஆதீனத்தில் நுழைந்து 10-க்கும் மேற்பட்ட ஆதீனங்களில் சேவையாற்றி இறுதியில் சென்னையில் அமைந்துள்ள தர்மபுரம் ஆதீனத்தினுடைய கட்டளையில் மிக சிறப்பாகப் பணியாற்றிய காரணத்தால் இவருக்கு பட்டணத்து தம்பிரான் என்ற பெயரும் உண்டு. தமிழ் வித்வான் பட்டம் பெற்றவராவார்.
இவர் 1971- ஆம் ஆண்டு தர்மபுரம் ஆதீனத்தினுடைய மடாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து மடாபதிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அரண்மனை போன்ற சண்முக விலாஸ் நிலையத்தில் ஒர் நாள் கூட தங்கியதில்லை. மாறாக, மடத்தில் உள்ள ஒரு சிறிய அறையிலேயே தன்னுடைய காலத்தைக் கழித்தார். பெரும்பாலும் படித்துக் கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு மிகவும் எளிமையானவர். இவர் ஆதீனத்தின் கீழ் திருநள்ளார், திருபுவனம், வைத்தீஸ்வரன் கோயில், திருப்பனந்தாள், திருக்கல்யாணபுரம், திருவையாறு, சீர்காழி உள்ளிட்ட 27 கோயில்கள் உண்டு. அவற்றில் நான்கு கட்டளைகளும் அடங்கும்.
Advertisement
Advertisement
இது அல்லாமல், ஒரு கல்லூரி, ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி, 4 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என இம்மடம் கல்வி வழங்கும் சர்வ கலாசாலையாகவும் திகழ்கிறது.
சமய நல்லிணக்கத்தைப் பேணி போற்றும் மடாதிபதி அவர்கள் பல்வேறு சமய நல்லிணக்க மாநாடுகளில் கலந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மடாதிபதி அவர்கள் பிற மத நண்பர்களுடன் நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். எனக்கும் இவருக்கும் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. ஒரு முறை நானும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் மடாதிபதி அவர்களுடன் அமர்ந்து தமிழ் குறித்து உரையாடி கொண்டிருந்தோம். அந்த உரையாடல் எங்களையும் அறியாமல் 4 மணி நேரத்தைத் தாண்டியது. எங்களுக்குப் பகல் உணவு படைத்தார். வழக்கம் போல் பகல் உணவு குளித்துவிட்டு தான் சாப்பிடும் பழக்கம் உடையவர். ஆதலால் நாங்கள் செல்லும் வரை அதாவது மாலை சுமார் 4.30 மணி வரை இந்த வயதான காலத்திலும் மரியாதை நிமித்தமாக நாங்கள் செல்லும் வரை உடன் இருந்து பின்னர் தான் அவர் குளித்து உணவருந்தச் சென்றார் அந்த அளவிற்குப் பண்பாடுமிக்கவர்.
இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் தனி நபர் இல்லங்களுக்குச் செல்வது மிகமிக அரிதாகும். அவ்வகையில் தன்னுடைய 48 வருட மடாதிபதி வாழ்க்கையில் சுமார் 5 நபர்களுடைய இல்லத்திற்கு தான் இவர் சென்றிருப்பதாக அறிய முடிகிறது. அதில் என்னுடைய வீடும் ஒன்று. கடந்த 2015 - ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி தினமணி நாகப்பட்டினம் பதிப்பு தொடக்க விழாவிற்கு வந்த அவர் என் வீட்டிற்கு இரவு சுமார் 10 . 15 மணிக்கு வந்தார். வந்தவர் சுமார் 11.45 வரை என் வீட்டில் இருந்தார். அவரை முறையான மரியாதை செய்து வரவேற்றேன். உடன் தற்போது 27-ஆவது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள மடாதிபதியும், மற்றும் கல்லூரி முதல்வர், மடத்தைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தம்பிரான்கள் உள்ளிட்ட சேவகர்களும் உடன் வந்தனர். அவர் எனக்கு என்னுடைய சமய நல்லிணக்க சேவையைப் பாராட்டி சால்வை அணிவித்தார். நான் அவருக்கு திருக்குர்ஆன் ஒன்றைப் பரிசாக அளித்தேன். அதனை பெற்ற அவர் உடனே அதை பிரித்து சில பக்கங்களை படித்து சில விளக்கங்களையும் கேட்டார்.
முதலில் அவர் திருக்குர்ஆனை திறந்தவுடன், ""எல்லா மொழியும் இடமிருந்து வலமாக வரும். அரபி மொழி மட்டும் என்ன வலமிருந்து இடமாக வருகிறதே?'' எனக்கேட்டார். இப்படியாக ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க நள்ளிரவு நேரமாக நெருங்கி விட்ட காரணத்தினால் உடனிருந்தவர்களெல்லாம் நாகூரிலிருந்து தர்மபுரம் செல்ல வேண்டிய காரணத்தால் நான் கட்டாயப்படுத்தியதனால் படிப்பதை நிறுத்திவிட்டு புறப்பட்டார்.
இப்படி எதையும் முறையாக ஆய்ந்து அறிந்து தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலும், மதம் கடந்து பழகக் கூடிய பண்பும் அவரிடத்தில் காண முடிந்தது. தமிழ் குறித்து அவர் பேசும் பொழுது மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படுவார். ஒருமுறை ஒரு வாக்கியத்தை அமைப்பதற்காக ஒரு பொருத்தமான வார்த்தையை அவ்விடத்தில் இடுவதற்காக யோசித்துக் கொண்டிருந்தபோது நான் அதற்கு பொருத்தமான வார்த்தையை சொல்லும் பொழுது என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை மனதார வாய் விட்டுப் பாராட்டினார். இப்படி தமிழ் ஆர்வம் கொண்டதால் தான் என்னவோ தமிழில் எம்.ஏ., பி.எச்டி முனைவர் பட்டம் பெற்ற முருகனாக இருந்து குமாரசாமி தம்பிரானாக மாறி தற்போது 27- ஆவது மடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளைத் தேர்வு செய்தார் போலும்.
கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக சைவ சமயப்பணி, தமிழ்ப்பணி, கல்விப்பணி இப்படிபல்வேறு பணிகளில் தர்மபுர ஆதீனம் தனது சேவையை தன்னிகரில்லாமல் செய்து வருகிறது. இது இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரும். 1000 வருடங்களைத் தாண்டும் என்று நம்புகிறேன்.