FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறப்புப் பள்ளியைத் தேடாமல் சிறப்பிடம்

தாய் என்பவள் மகளுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறாள் என்பதை அளவிட முடியாது.

4 ஏப்ரல் 2026, 8:00 pm IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

தாய் என்பவள் மகளுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறாள் என்பதை அளவிட முடியாது. அதிலும், மாற்றுத்திறன் குழந்தையை வளர்ப்பது என்பது சாதாரண பொறுப்பல்ல; மன உறுதி, பொறுமை, அன்பு, விடாமுயற்சி ஆகியவை இருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மு.பிரேமலதா.

மாற்றுத்திறனுடைய மகள் நாககீர்த்தியை சிறப்புப் பள்ளியில் சேர்க்காமல், பொதுப்பள்ளியிலேயே சேர்த்து, விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய வைத்துள்ளார். அவர் தற்போது கல்லூரியிலும் படித்து வருகிறார்.

Advertisement

Advertisement

'இது எப்படிச் சாத்தியமாயிற்று?' என்பது குறித்து பிரேமலதாவிடம் பேசியபோது:

'என் கணவர் பா.முத்துக்குமார், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். மகள் நாககீர்த்தி. அவருக்கு உடலில் குரோமசோம்களின் எண்ணிக்கையில் 23-இல் இருபத்திரண்டே இருந்தது. ஆஞ்சியோகிராம் போன்ற பல சிகிச்சைகள் அளித்தும் வளர்ச்சியில்லை. அவரின் திறமைகளைக் கண்டறிந்து வளர்க்க முடிவெடுத்தேன்.

பெற்றோர் அளிக்கும் தன்னம்பிக்கையே பிள்ளைகளுக்கு முக்கியம். அது வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவையாக இருக்கும் என்று எண்ணினேன். அவரை சிறப்புப் பள்ளியில் சேர்த்து தனிமைப்படுத்தாமல், பொதுவான சமூகத்தில் இணைந்து வளர்த்தெடுக்கத் தீர்மானித்தேன்.

நாககீர்த்தி மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் 5-ஆம் வகுப்பு வரையும், ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு உதவிப் பெறும் பள்ளியிலும் படித்தார். தற்போது மதுரை ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு வரலாறு படித்து வருகிறார்.

கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததால், எழுத்து, வார்த்தைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கு சிறிது தடங்கல் ஏற்பட்டது.

கோரிப்பாளையம் பொன்முடியார் மாநகராட்சிப் பள்ளியில் மேல்நிலைப் படிப்பு படித்தார். அங்கே தலைமையாசிரியர் நாகஜோதி, ஆசிரியர்கள் கணபதி, அனுராதா உள்ளிட்டோரின் முயற்சியும், வழிகாட்டுதலும் பெரிய முன்னேற்றத்தை மகளுக்கு ஏற்படுத்தியது. இசை ஆசிரியர் சாவித்திரியும் பல உதவிகள் செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், ஓவியம், பரதநாட்டியம், கலைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோபம் வரும்போது பேச்சு அதிகரிக்கும். தேவைக்கேற்ப புரிந்துகொள்வார். பேசுவார். உருவத்தில் சிறிய குழந்தையாக இன்னும் வலம் வருகிறார். 10 ஆண்டுகளாக உடல் எடையில் எந்த முன்னேற்றமும் அடையாமல், 13 முதல் 14 கிலோ எடையிலேயே இருக்கிறார். பெண்ணுக்கான அனைத்து தேவைகளையும் அவரே பூர்த்தி செய்து கொள்வார். ஆனால், சமையல், வீடு துப்புரவு போன்ற பணிகள் மேற்கொள்ள மாட்டார்' என்றார் மு.பிரேமலதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments