முகப்பு
தினமணி கதிர்

மிதக்கும் சொர்க்கம்

நாட்டில் உள்ள ஒரு சொகுசு கப்பலான 'கார்டெலியா எம்பிரஸ்' மும்பை, கொச்சி, கோவா, சென்னையில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கிறது.

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:12 am IST
பகிர்:

நாட்டில் உள்ள ஒரு சொகுசு கப்பலான 'கார்டெலியா எம்பிரஸ்' மும்பை, கொச்சி, கோவா, சென்னையில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கிறது. இதை 'மிதக்கும் சொர்க்கம்', 'கடல் நகரம்' என்றே அழைக்கின்றனர். பன்னாட்டு, இந்திய உணவு வகைகளுடன் ஓய்வு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அளிப்பதோடு, அனைத்து மாநில மக்களையும் ஒரு சேரப் பயணிக்க வைக்கிறது. கடலின் அமைதியையும், உலகத்தரம் வாய்ந்த ஆடம்பரத்தையும் ஒன்றிணைக்கும் அனுபவமாக இந்தக் கப்பல் பயணம் உள்ளது. இது நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், மேலும் இரண்டு சொகுசு கப்பல்கள் இதனுடன் இணைய உள்ளன.

ராயல் கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த 'கார்டெலியா எம்பிரஸ்' இந்தியாவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. பிரான்சில் கட்டுமானம் செய்யப்பட்ட 36 வயதான இந்தக் கப்பல் ஓய்வில்லாமல் பயணிக்கிறது. அனைத்துப் பயணத்திலும் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. சுமார் 650 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தொடர்ந்து ஆறு மாதம் வேலை பார்ப்பார்கள். பின்னர், இரண்டு மாதம் விடுப்பு. கேப்டன் போன்ற உயர் பதவிகளில் ரஷியர்கள் பணிபுரிகின்றனர். பணியாளர்களில் பெரும்பாலானோர் மும்பையைச் சேர்ந்தவர்கள்தான்.

சிறப்பு அம்சங்கள்

Advertisement

Advertisement

 முழுவதும் குளிரூட்டப்பட்ட 'கார்டெலியா எம்பிரஸ்' 690 அடி நீளத்தில், 11 தளங்களில் 796 அறைகளைக் கொண்டது. 1,750 பேர் தங்கலாம். 5 மதுக்கூடங்கள், 3 உணவகங்கள், 2 நீச்சல் குளங்கள், 6 மின்தூக்கிகள், 4 மாற்றுத்திறனாளிகளுக்கான அறைகள், ஹைடெக் கலை அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், வணிக வளாகம், விடியோ வளாகம், அகாதெமி, சிறிய மருத்துவமனை, இணைய வசதி, ஸ்பா, சலூன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

நடன, நாடக, மாயாஜால நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது. ஒருசில நிகழ்ச்சிகளுக்குக் கட்டணம் உண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விடியோ, புகைப்படங்களை எடுக்க அனுமதியில்லை. லாஸ் வேகாஸ் ரக சூதாட்ட கிளப்பும் உண்டு. அறைகளில் 3 இரவுகள் தங்குவதற்கு ரூ.32 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓர் அறையில் நான்கு பேர் தங்கலாம்.

கடலைப் பார்த்தபடி, மசாஜ், ஃபேஷியல் செய்து கொள்ளும் வசதிகளை மேற்கொள்ள தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு குளங்களில் ஒன்றில் ஆவி பறக்கும் சானாவில் இளைப்பாறலாம். குமிழ் விடும் ஜக்குஸிகளில் திளைத்து மகிழலாம். பரந்த கடலைக் கண்டவாறே ரசித்துச் சாப்பிட இரு 'ஃபுட் கோர்ட்' செயல்படுகின்றன.

தனிக் கட்டணம் செலுத்திச் சாப்பிட 'சாப்ஸ்டிக்ஸ்' (சிறப்பு பான்-ஆசிய உணவகம்) இருக்கிறது. காலை முதல் இரவு வரை இலவச தேநீர், காபி, பால் கிடைக்கும். மாலை சிற்றுண்டியே விருந்தாக வழங்கப்படுகிறது. அறைகளில் இருக்கும் கழிவறைகளைத் தவிர, பொதுக் கழிவறைகளில் 'டிஷ்ஷு' தாள்களைப் பயன்படுத்த வேண்டும். கப்பலில் தண்ணீருக்கும் பஞ்சமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.