தானத்தில் சிறந்தது...
தலைமுடி உதிர்ந்து மன வேதனைக்கு உள்ளாகும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக முடிதானம் செய்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த இருபத்தாறு வயதான ஏ. கண்ணன்.
தலைமுடி உதிர்ந்து மன வேதனைக்கு உள்ளாகும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக முடிதானம் செய்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த இருபத்தாறு வயதான ஏ. கண்ணன்.
அரியலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜெயங்கொண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் முடிதான அறக்கட்டளை நிறுவனத்தில் தனது 28 செ.மீ. நீளமுள்ள முடியை அளித்துள்ளார்.
இந்த எண்ணம் எதனால் ஏற்பட்டது?' என்பது குறித்து கண்ணனிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
எனது தந்தை ஆட்டோ ஓட்டுநர் கே. அன்பழகன். எனது தாய் இல்லத்தரசி. எனது தாயின் அம்மா பழனியம்மாள் பள்ளிப் படிப்பை மட்டுமே கற்றவர். எனது தாயுடன் சேர்த்து, 4 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்தவர். எனது குழந்தைப் பருவத்திலேயே அம்மாச்சி பழனியம்மாள் மீது எனக்கு அளப்பரிய அன்பு உருவானது.
ஆட்டோமொபைல் துறையில் இளநிலைப் பொறியியல் பட்டமும், முதுநிலையில் மேலாண்மைப் பட்டமும் பெற்றுள்ளேன். கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேரமாக திருச்சி கரூர் புறவழிச் சாலையில் உள்ள தேநீர்க் கடையில் காசாளராகப் பணிபுரிந்தேன். இந்தப் பணியோடு தனியார் பெரு நிறுவனத்தில் அமெரிக்காவில் உள்ளோருக்கான மருத்துவக் காப்பீடு பெற்றுத் தரும் பணியிலும் இணைந்தேன். பின்னர், நான் பணிபுரிந்த தேநீர்க் கடையை சவாலாக ஏற்று நடத்தி, இப்போது 10 பேருக்கு வேலை அளித்துவருகிறேன்.
2022ஆம் ஆண்டில் ஒரு நாள் அம்மாச்சிக்கு உணவு உள்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு தொண்டைப் பகுதியில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சை அளித்தும் அவர் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். அம்மாச்சி இடத்தை நிரப்பும் வகையில், அவருக்கடுத்து குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனிப்பதில் அக்கறை செலுத்தியவர் சித்தி யோகராணி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணிபுரியும் அவர், அம்மாச்சிக்குப் பின்னர் என்னை தேற்றி ஊக்கப்படுத்தினார்.
புற்றுநோய்க்கு யாரும் ஆளாகக் கூடாது' என்பதே இறைவனிடம் எனது வேண்டுகோளாக இருந்தது. அப்போதுதான், புற்றுநோயாளிகளுக்கு முடிதானம் அளிப்பது குறித்து சித்தி என்னிடம் கூறினார். அம்மாச்சியின் நினைவாக, தலை
முடியை வளர்க்கத் தொடங்கினேன். இரு ஆண்டுகளாக நல்ல முறையில் வளர்த்த நீண்ட தலைமுடியை புற்றுநோயாளிக்கு அம்மாச்சியின் நினைவாக அவரது நினைவு நாளிலேயே 2026 ஏப். 15இல் தானமாக அளித்தேன்.
தானம் வழங்க வரைமுறைகள்:
முடியை தானமாக வழங்க சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை நன்கு கத்தரித்து வழங்காவிட்டால், தானமாக வழங்கும் முடி பயன்படாது. தானம் செய்யக் கூடிய முடி குறைந்தபட்சம் 10 முதல் 14 அங்குலம் வரை நீளம் இருக்க வேண்டும். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைமுடியை விக்' வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனத்தினர் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களைக் கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை மட்டுமே தானமாகப் பெறுகின்றனர். சிலர் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்து விடுகின்றனர். ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளைப் பெறுவதில்லை.
தானம் கொடுக்கப் போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைக்க வேண்டும். எந்தப் பகுதியில் இருந்து வெட்டப் போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக் கூடாது. இத்தனை விஷயங்களையும் கவனத்தில் எடுத்தால் மட்டுமே நாம் செய்ய நினைக்கும் சேவை உரியவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
ஒரு புற்றுநோயாளி தன்னுடைய சிகிச்சையை முடித்துவிட்டு, எட்டு மாதங்கள் வரை அந்த விக்' கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர்களுக்கு முடி தானாக வளர ஆரம்பித்துவிடும். பின்னர், விக் தேவைப்படாது. எனவே, அதனை கொடையாக வழங்கிய நிறுவனத்திடமோ, மருத்துவமனையிடமோ கொடுத்து விடுவர். அதனை மீண்டும் சீரமைத்து அடுத்த நோயாளிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், நான் தானம் வழங்கிய முடி அடுத்தடுத்து பயன்பாட்டில் இருக்கும்' என்கிறார் கண்ணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.