முகப்பு
தினமணி கதிர்

மரக்கன்று நடுவோம்...

பணி நிறைவு பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு, சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், தனது ஓய்வுக் காலத்தைப் பயனுள்ளதாக மாற்றி, மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார் அர்ச்சுனன்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 4:01 pm IST
பகிர்:

பணி நிறைவு பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு, சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், தனது ஓய்வுக் காலத்தைப் பயனுள்ளதாக மாற்றி, மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார் அர்ச்சுனன். இவர் மாதம்தோறும் தனது ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்களுக்காகவே செலவழித்து வருகிறார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தைச் சேர்ந்த அர்ச்சுனனிடம் பேசியபோது:

எனது தந்தை விநாயகம் ஆசிரியராகப் பணியாற்றினார். தாய் வேலம்மாள் இல்லத்தரசி. சிறு வயதில் திரைப்படங்களில் மக்களுக்காக சேவை செய்தவர்களைப் பிறர் பாராட்டுவதைப் பார்த்து, வளர்ந்ததும் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இளைஞரானவுடன் சேவை செய்யத் தொடங்கினேன். பின்னர், நகராட்சியில் பணி கிடைத்தது. பணிக்காலத்தில் ஓய்வு நேரங்களில் மரக்கன்றுகளை நடுவேன்.

Advertisement

Advertisement

பணி நிறைவு பெற்றவுடன், மரக்கன்றுகள் நடுவதை அன்றாடப் பணியாக்கி, 15 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். பனை மரங்களின் பயன்களை பிரசாரமாகச் செய்து வருகிறேன். இதுவரை குளக்கரைகளிலும், சாலையோரங்களிலும் 25 ஆயிரம் பனை விதைகளை விதைத்துள்ளேன். மரக்கன்றுகளை நடுவதுடன் நின்றுவிடாமல் பைக்கில் தண்ணீர் கொண்டு சென்று, ஊற்றி அக்கன்று ஓரளவு வளரும் வரை அதை பாதுகாத்து வருகிறேன்.

நான் தனி ஒருவனாகச் செய்த பணியைப் பார்த்து ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், அலையன்ஸ் சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்பினர் என்னுடன் இணைந்து இந்தச் சேவையைச் செய்து வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு நிதி சாராத தேவைகளை, உதவிகளைச் செய்து வருவதுடன், ஆதரவற்றோர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் உதவி வருகிறேன். உடல்நலம் இன்றி தெருக்களில் விடப்படும் உயிரினங்களை உரிய முறையில் பராமரித்து வருகிறேன்.

எனது சேவைகளைப் பாராட்டி விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பல்வேறு சமூக, பொது நல அமைப்பினர் வழங்கியுள்ளனர். விருதுகள் எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. நான் செய்யும் பணிகள் ஆத்ம திருப்தியை அளிக்கிறது. அதனால் காலம் உள்ளவரை மரக்கன்றுகளை நடும் பணியை விடாமல் செய்வேன்.

இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அவர்கள் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டால் வாழ்க்கை முறை மாறும் என்பதால், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்' என்கிறார் அர்ச்சுனன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments