உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படும் விஷயங்கள் சிலவற்றை அறிவோம்.
தேர்
தமிழ்நாட்டில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்ட மிகப் பெரிய தேராகும். இதன் சக்கரங்கள் பழுதுபட்டு விட்டதால், 1948-ஆம் ஆண்டில் இருந்து ஓடவில்லை. இது மீண்டும் 1975-ஆம் ஆண்டு திருச்சி பெல் தொழிற்சாலை யில், இரும்புச் சக்கரங்கள், கிரேன் பொருத்தப்பட்டு, மீண்டும் ஓடத் தொடங்கியது.
பள்ளி
உத்தரப் பிரதேசத்தில் லக்னோ நகரில் உள்ள 'தி சிட்டி மாண்டிசோரி ஸ்கூல்' எனும் பள்ளியில்தான் உலகிலேயே அதிக அளவிலான மாணவர்கள் பயில்கிறார்கள். தொடக்கத்தில் ஐந்து மாணவர்களே இங்கு படித்தனர். 2012-ஆம் கல்வியாண்டில் 45 ஆயிரம் மாணவர்கள் பயிலும் பள்ளியாக உயர்ந்தது. ஜெகதீஷ் காந்தி என்பவர் 1959-ஆம் ஆண்டு ரூ.300 முதலீட்டில் இந்தப் பள்ளியைத் தொடங்கினார். தற்போது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன.
ரயில்
ரஷியாவில் உள்ளது டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதையாகும். 1891-ஆம் ஆண்டு மே மாதத்தில் பசிபிக் கடற்கரையில் விளாடி வாஸ்டாக் துறைமுகத்தில் ஜார் மன்னர் மகன் நிக்கோலாஸ் அடிக்கல் நாட்டினார். தலைநகர் மாஸ்கோவில் இருந்து விளாடி வாஸ்டாக் வரையில், 10,672 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் புறப்பட்டு, விளாடி வாஸ்டாக் சென்று அடைய 9 நாள்கள் ஆகும். இதில், மொத்தம் 97 ரயில் நிறுத்தங்கள் உள்ளன.
மிகப்பெரிய ரயில் நிலையம் நியூயார்க் நகரில் உள்ள கிரான்ட் சென்ட்ரல் நிலையமாகும்.
உலகில் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோர் உள்ள நாடுகள்: ஜப்பான், இந்தியா, ஜெர்மனி.
சில நாடுகளில் சமதள பரப்பு கிடையாது. இதனால், மிகவும் குறைந்த அளவிலான ரயில் பாதைகளைக் கொண்டுள்ளது. அதில் வாடிகன் சிட்டி-1.27 கி.மீ., லெசோதா- 1.6 கி.மீ., மொனாக்கோ- 1.7 கி.மீ., லாவோஸ் 3.5 கி.மீ., நவுரு- 3.9 கி.மீ.
எல்லைக்கோடு
சர்வதேச எல்லைக்கோடுகள் அதிகம் உள்ள நாடுகள்:
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே முஷ்கோவ் பள்ளத்தாக்கில் 'ரெட்கிளிப் எல்லைக்கோடு' உள்ளது. சர் சைரிஸ் ரெட் கிளிப் என்பவரால், 1947-இல் இது அமைக்கப்பட்டது.
இந்தியா, சீனாவைப் பிரிக்கும் 'மெக்மோகன்' எல்லைக்கோடு சர் ஹென்றி மெக்மோகன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 1,120 கி.மீ. ஆகும்.
ஒன்றுபட்ட இந்தியா- பாகிஸ்தான் இணைந்திருந்தபோது, இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு இடையே 'குராண்ட் எல்லைக்கோடு' ஏற்படுத்தப்பட்டது. இதன் நீளம் 2,640 கி.மீ. ஆகும்.
வட கொரியாவையும், தென் கொரியாவையும் '38-ஆவது பார்லஸ்' எனும் எல்லைக்கோடு பிரிக்கிறது.
பர்மா, தாய்லாந்து, லாவோஸ் நாடுகளின் எல்லைகள் கூடும் இடம் 'தங்க முக்கோணம்' என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவையும் கனடாவையும் '49-ஆவது பார்லஸ்' எனும் எல்லைக்கோடு பிரிக்கிறது.
பிரான்ஸையும் ஜெர்மனியையும் பிரிக்கும் 'மகனோட்' எனும் எல்லைக்கோட்டை பிரான்ஸ் ஏற்படுத்தியது. இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் 'சீக் பிரைட்' எனும் மற்றொரு எல்லைக்கோட்டை ஜெர்மனி ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.