ஜெர்மனி செல்லும் அன்னவாசல் எடிசன்!
ஜெர்மனி சர்வதேச சந்திப்பில் பங்கேற்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர் எக்ஸ். பிரான்சிஸ் எடிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இளம் வானியல் ஆர்வலர்கள் பங்கேற்கும் ஜெர்மனி சர்வதேச சந்திப்பில் பங்கேற்பதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர் எக்ஸ். பிரான்சிஸ் எடிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.இ. (சிவில்) முடித்த 37 வயதான இவர், கரோனா காலத்தில், புதுக்கோட்டை நகர வீதிகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்தவர்களுக்காக, 'வெறும் ரூ. 7 தாருங்கள், ஒருவரைப் பசியாற்றலாம்' என சமூக ஊடகங்களில் பதிவிட்டு, நிதி சேகரித்து தீவிரமாக உணவளித்தவர். புதுக்கோட்டை அறிவர் வானியல் இயக்கம், திருச்சி பி.எஸ்.ஆர். அறக்கட்டளை போன்றவற்றுடன் இணைந்து களப் பணியாற்றி வருபவர்.
இது குறித்து எடிசன் கூறியது:
Advertisement
Advertisement
'வானியல் குறித்த ஆர்வமுள்ளோர் மிகவும் குறைவு. அரசுப் பள்ளிச் சிறார்கள், எந்தவிதமான வசதியும் இல்லாத பழங்குடியினச் சிறார்களிடத்தில் தொலைநோக்கியுடன் சென்று வானியல் அதிசயங்களைப் பார்க்க வைக்கும் முயற்சியை சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறேன்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள சோளகர்தொட்டி பழங்குடியினக் குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு வானிலுள்ள கோள்கள் பற்றியும், இயற்கை அறிவியல் குறித்தும் அறிமுகப்படுத்திவிட்டு வந்தேன்.
சர்வதேச வானியல் ஆர்வலர்கள் குழு நடத்திய ப்ரீ பைனலில் செயற்கைக்கோள்கள் குறித்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன். உலகம் முழுவதும் 27 ஆயிரம் பேர் பங்கேற்ற இதில், தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரம் பேரில் நானும் ஒருவன். ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையாகக் கிடைக்க இருக்கிறது. மேலும், நவம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெறவுள்ள சர்வதேச சந்திப்பில் பங்கேற்கவுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள என்னைப் போன்ற வானியல் ஆர்வலர்களைச் சந்திக்கவும், அவர்களின் புத்தாக்கத் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.
ப்ரீ பைனலில் எனக்குக் கிடைத்த ரூ. ஒரு லட்சத்தைக் கொண்டு தரமான தொலைநோக்கி வாங்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வானியல் குறித்த அறிமுகத்தைப் பயிற்றுவிப்பதே திட்டம்' என்கிறார் எடிசன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.