காக்கிச் சட்டைகளின் கருணை...
காவல் துறையினர் என்றாலே கடினமாக இருப்பார்கள் என் மனப்பாங்கு எல்லோரிடத்திலும் உண்டு.
பெ.பெரியார்மன்னன்
காவல் துறையினர் என்றாலே கடினமாக இருப்பார்கள் என் மனப்பாங்கு எல்லோரிடத்திலும் உண்டு. அவர்களின் பணி அப்படிப்பட்டது. இருப்பினும், காவலர்களிடம் மனித நேயமும் உதவும் எண்ணமும் மேலோங்கி வருகிறது என்பதற்கு அண்மைக்கால நிகழ்வுகள் பல சான்றாக உள்ளன.
தமிழ்நாடு அரசு காவல் துறையில் 2009-ஆம் ஆண்டில் பணிக்குச் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து '2009 பேட்ஜ் காவல் துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு' என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சக காவலர்களிடம் இருந்து நிதி திரட்டி, பணியின்போது இறந்து போகும் காவலர்களின் குடும்பத்தினருக்கு குழுவின் சார்பாக நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.
2024 நவம்பர் 5- இல் இறந்த சேலத்தைச் சேர்ந்த காவலர் ரஞ்சித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.23.71 லட்சமும், 2025 அக். 7-இல் இறந்த சேலம் கன்னங்குறிச்சி காவலர் அன்புராஜ் குடும்பத்தினருக்கு ரூ.24.10 லட்சமும் நிதியுதவியை வழங்கினர்.
இதுவரை 2009 குழு காவல்துறை உதவும் அன்பு உள்ளங்கள் குழு வாயிலாக, பணியின்போது மறைந்த 42 காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக ரூ.10.08 கோடியை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழுவின் சார்பில் நிதியுதவியைத் திரட்டி வழங்குவதற்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இருந்து பெறப்படும் நிதி உதவி முறையாகக் கணக்கிடப்பட்டு வரவு செலவுகளை குழுவின் ஒருங்கிணைப்பாளரான தலைமைக் காவலர் பரமசிவன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.