விசாரணை என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது!
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து...
கோவை, வெள்ளக்கிணறு பகுதி அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு, காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர காவல் துறைக்கு உள்பட்ட, துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார் (வயது 35). இவர் கடந்த 15 ஆம் தேதி, சக போலீஸாருடன் இணைந்து, வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே 23 வயது இளம்பெண், அவரது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். உடனே போலீஸார் அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.
Advertisement
Advertisement
அப்போது காவலர் வினோத்குமார், அந்த இளம்பெண்ணை தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார். அவர் அழைத்துச்சென்ற பகுதியில் யாரும் இல்லாததால், அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் ஓடிச்சென்று தனக்கு நடந்ததை கூறி அழுதார். இது தொடர்பாக, அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், வினோத்குமார் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, வினோத் குமார் மீது, துடியலூர் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வினோத்குமாரை போலீஸார் கைது செய்தனர். பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கோவையில் இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
An incident in which a police officer sexually harassed a young woman while she was talking to a male friend near the Vellakinaru area in Coimbatore has caused shock.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.