முகப்பு
தினமணி கதிர்

தெலுங்கில் கால் பதிக்கும் கார்த்தி!

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான கடந்த திங்கள்கிழமை பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30-ஆவது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 31 மே 2026, 11:47 am IST
பகிர்:

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான கடந்த திங்கள்கிழமை பர்த் டே ஸ்பெஷலாக அவரது 30-ஆவது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதிக்கிறார். சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் படத்தைத் தயாரிக்கிறது.

கார்த்தி இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2'-வில் நடித்து முடித்துவிட்டார். கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதனை அடுத்து 'டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' படத்தில் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் ஜோடி. இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ராமேசுவரம் பகுதிகளில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையே தனது நேரடி தெலுங்குப் படத்தைத் தொடங்கியிருக்கிறார்.

Advertisement

Advertisement

சூர்யாவின் 'விஸ்வநாதன் &சன்ஸ்' போல இதுவும் தெலுங்கு - தமிழில் உருவாகிறது. படத்தை டோலிவுட் கல்யாண் சங்கர் இயக்குகிறார். இவர் தெலுங்கில் இதற்கு முன் 'மேட்', 'மேட் ஸ்கொயர்', 'டில்லு ஸ்கொயர்' படங்களை இயக்கியவர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற படப் பூஜையில் 'வாரிசு' தயாரிப்பாளர் தில்ராஜூ, மீனாட்சி செளத்ரி, சுனில், தயாரிப்பாளர் எனப் பலரும் பங்கேற்றனர். விரைவில் படத்தின் பர்ஃஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.

கருப்பு வெற்றிக்கு நேர்த்திக்கடன்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படத்துக்குத் திரையரங்குகளில் ஏகோபித்த வரவேற்புக் கிடைத்திருக்கிறது. ரூ. 200 கோடியைத் தாண்டித் திரைப்படம் வசூல் செய்துகொண்டிருப்பதாகப் படக்குழுவினரும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும், திரையரங்குகளைக் கொண்டாட்டகரமானதாக மாற்றியிருக்கின்றன. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் திரையரங்குகளுக்குச் சென்று வருகிறார் இயக்குநர்.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்குக் கருப்பசாமிக்கு 18 அடி அரிவாளை சாத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. மதுரை அழகர்கோவிலிலுள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு இந்தப் பெரிய அரிவாளை ஆர்.ஜே. பாலாஜியும், அவருடைய அணியினரும் சாத்தியிருக்கிறார்கள்.

இக்கோயிலில் அரிவாள் சாத்துவது பிரசித்தி பெற்ற நேர்த்திக்கடனாகப் பார்க்கப்படுகிறது. 'கருப்பு' படத்தின் டைரக்ஷன் டீம் அரிவாள் சாத்திய காணொலியைப் படக்குழுவினர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களிடையே பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ''இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்கும்னு ரொம்பவே தீர்க்கமா நம்பினேன். படத்தை கடவுள் கொண்டு போய்ச் சேர்ப்பார்னு நம்பிக்கை இருந்தது. முதல் நாள் ரிலீஸ் கஷ்டமாக இருந்தது. ஆனால், ரிலீஸ் ஆகும்போது இந்தப் படம் பெரிய படமா,

எல்லாருக்கும் புடிச்ச படமா மாறும்னு நான் நம்பினேன். அது மாதிரி இப்போ நடந்திருக்கு'' எனத் தெரிவித்திருக்கிறார்.

அசத்தப் போகும் 'பெத்தி'!

''கிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை 'பெத்தி' படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன'' என்கிறார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.

இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் குறித்து, அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸும், சுகுமார் ரைட்டிங்ஸும் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்துள்ளார். பாடல்கள், டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படம் ஜூன் 4-இல் வெளியாகிறது.

- DEEPAK

'கெளர்நாயுடு' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார் கூறியது:

''கதை என்னை மிகவும் கவர்ந்தது. எனது கதாபாத்திரத்துக்குத் தெளிவான நோக்கமும், வலுவான உணர்வு பூர்வமான பின்னணியும் இருக்கிறது. 'பெத்தி'- கெளர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும். இந்தப் படத்துக்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார். அவரது உடல் மாற்றமும், அர்ப்பணிப்பும் அளவிட முடியாதது. இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்தக் கதாபாத்திரத்திலே வாழ்ந்து, மிக நேர்மையாக நடித்துள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனாவின் கதை சொல்லும் பாணியும், மேக்கிங் தரமும் அசத்தலாக உள்ளது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் த. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும். பல விளையாட்டுகளை மையப்படுத்தும் இந்தப் படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். 'பெத்தி'யின் பயணம் மிகவும் விசேஷமானது. அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும். மிகுந்த ஆர்வத்துடன் உயர்வான தரத்தில் தயாரிப்பாளர் சதீஷ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

'ஜெயிலர் 2' , 'கும்மடி நரசய்யா' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறேன். நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிப்பேன்'' என்கிறார் சிவராஜ்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.