மகளைப் படிக்க வையுங்கள்- உயர்த்துங்கள்
அகில இந்திய அளவில் நடந்து முடிந்த "இந்திய அரசு நிர்வாகப் பணி'க்காக நடத்தப்பட்ட தேர்வில், இரண்டாவதாகவும்
அகில இந்திய அளவில் நடந்து முடிந்த "இந்திய அரசு நிர்வாகப் பணி'க்காக நடத்தப்பட்ட தேர்வில், இரண்டாவதாகவும், தேர்வு எழுதிய பெண்களில் முதலாவதாகவும் வந்திருப்பவர் அனுகுமாரி. ஹரியானாவைச் சேர்ந்த அனு, இல்லத் தலைவி. நான்கு வயது மகனுக்குத் தாய், வயது முப்பத்தொன்று. அனுவின் வெற்றியைத் தொடர்ந்து, ஹரியானா மாநிலத்தில், "மகளைப் படிக்கவையுங்கள்... மகளை உயர்த்துங்கள்..' இயக்கத்தின் ஹரியானா மாநிலத்தின் தூதுவராக ஹரியானா அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அனுவின் கல்வித் தகுதி பெüதீகத்தில் ஹானர்ஸ். நிதி மற்றும் சந்தைப்படுத்துதலில் எம்.பி.ஏ. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். படிப்பில் பள்ளியிலும் சரி.. கல்லூரியிலும் சரி... முதல் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிப்பாராம் . ஹரியானாவில் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவது அதிகம். இன்றும் அந்த சூழ்நிலை மாறவில்லை. பெண் இந்திய அளவில் ஐஏஎஸ் தேர்வில் இரண்டாவதாக வந்திருப்பது "பெண்ணால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை' என்ற செய்தியையும் அனு சொல்லியிருக்கிறார். அனு சொல்கிறார்:
எம்பிஏ முடித்ததும் ஒன்பது ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு இருந்தேன். நல்ல வேலைதான். ஆனால் போகப் போக திருப்தி விடை பெற்று சலிப்பு தட்ட ஆரம்பித்தது. சமுதாயத்திற்கு எனது பங்களிப்பை செய்ய முடியவில்லை. எனது லட்சியக் கனவு ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான். இந்திய அரசின் நிர்வாகத் தேர்வு எழுதுவதற்காக, பணியை விட்டு விட்டு மீண்டும் படிப்பில் மூழ்கினேன். தேர்விற்காக சமூகவியலைப் பாடமாக எடுத்துக் கொண்டேன். இந்த அரசுப் பணியில் மக்களுக்காக பல வாய்ப்பு வசதிகளை செய்து தர முடியும்.
நான் தனியார் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை 2015 -இல் விட்டு விட்டேன். 2016 -இ ல் முதல் தடவையாக தேர்வு எழுதினேன். ஆனால் கட்-ஆஃப் மார்க்குக்கு ஒரேயொரு மார்க் குறைந்து போனதால் வாய்ப்பினைத் தவறவிட்டேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். வெற்றி பெற்றேன். நூல்களிலிருந்து எனது கவனக் குவிப்பை எந்த தருணத்திலும் மாற்றிக் கொள்ளவில்லை. பொது அறிவிற்காக வலைதளம் பெரிதும் கைகொடுத்தது
எனது கணவர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். தேர்வுக்காக நான் எனது அத்தையின் வீட்டுக்கு வந்து விட்டேன். சுமார் ஒன்றரை ஆண்டு அத்தையுடன் வசித்தேன். அந்த கிராமத்தில் செய்தித்தாள்கூட வராது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மகனை எனது அம்மா பார்த்துக் கொண்டார்கள். அதனால் மகன் பற்றிய கவலை பாதி குறைந்தது என்றாலும் சிறுவயதில் மகனை விட்டு பிரிந்திருப்பது தாய்க்கு எவ்வளவு வேதனையை வெறுமையைக் கொடுக்கும் என்பது இன்னொரு தாய்க்குத்தான் புரியும். அப்போது மகனுக்கு இரண்டரை வயதுதான். இருந்தாலும், இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மகனை விட்டு பிரிந்ததினால், வாட்டிய பிரிவை சகித்துக் கொண்டேன். பிரிவு தந்த வருத்தம், சோகம்தான் "இந்தப் பிரிவை வெகு சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்... அதற்கு தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி..' என்று என்னை தீவிரமாகப் படிக்க வைத்தது. இப்போது அந்தப் பிரிவு தந்த சோகத்திற்கு, சாதனை பரிசாகக் கிடைத்திருக்கிறது.
எனது மாநிலத்தில் பெண்களை ஒதுக்கும், அடக்கும் மனோபாவம்தான் அதிகம். பெண்கள் இனம் மேல் இழைக்கப்படும் கொடுமைகள், குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நான் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவேன் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. எனது வெற்றி எனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது.
என்னை வாழ்த்துவதற்கு வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பலரும் வந்து போவதை பார்க்கும் மகன், ""வீட்டில் திருமணம் ஏதும் நடக்கப் போகிறதா. இத்தனை பேர்கள் வந்து போகிறார்களே' என்று கேட்கிறான். சாதாரணமாக பெற்ற பிள்ளை ரேங்க் வாங்கித்தான் பெற்றோர் பார்ப்பார்கள். இங்கு தாயாகிய நான் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் வந்ததை மகன் பார்க்கிறான். அவனுக்கு என்ன ஏது என்று புரியவில்லை . ஏதோ மகிழ்ச்சியான விஷயம் வீட்டில் நடந்திருக்கிறது. அதனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது என்ற புரிதல் மட்டுமே மகனுக்கு உள்ளது என்கிறார் அனு குமாரி.
- பிஸ்மி பரிணாமன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.