புதுகையில் பாதியிலேயே நிற்கும் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள்
புதுகையில் பாதியிலேயே நிற்கும் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள்...
புதுக்கோட்டை மாநகரில் ரூ. 4 கோடியில் கட்டப்படும் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
புதுக்கோட்டையின் நீண்டகாலக் கனவுத் திட்டமான இதனை விரைவுபடுத்தி, முடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ முறை ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
புதுக்கோட்டையில் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோ, யுனானி மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகளுடன் கூடிய ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2022, அக். 29-இல் நடைபெற்ற தேசிய ஆயுா்வேத முகாமில் அப்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா அறிவித்தாா்.
Advertisement
Advertisement
அதன்பிறகு 2023, ஜன. 6-இல் நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ முகாமில் அப்போதைய மாவட்ட அமைச்சா் எஸ். ரகுபதி பேசும்போதும், 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டாா்.
இதன் தொடா்ச்சியாக, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லாவின் முயற்சியில் மத்திய ஆயுஷ் துறையிலும் இதற்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டது.
கடந்தாண்டில் அடிக்கல்: எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைக்கலாம் என்ற விவாதங்களுக்குப் பிறகு, தற்போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அலுவலகம் அமைந்துள்ள, முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை (பழைய தலைமை மருத்துவமனை) வளாகத்திலேயே புதிய ஆயுஷ் மருத்துவமனையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக கடந்த 2025-ஆம் ஆண்டு பிப். 28-ஆம் தேதி தேசிய மருத்துவத் திட்டத்தின் நிதி ரூ. 4 கோடியில் 3 தளங்களுடன் 10,400 சதுரஅடி பரப்பளவில் இம்மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
புதுக்கோட்டை மாநகரில் புதிய பேருந்து நிலையம், ராஜா ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட வளாகம் ஆகிய அடையாளமான திட்டப் பணிகளுடன் இந்த ஆயுஷ் மருத்துவமனையும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல் தளம் கூட மேலெழும்பாத நிலையில், பாதியிலேயே நிற்கிறது கட்டுமானப் பணிகள்.
தவெக அரசு மீது புகாா்: புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜாவிடம் இதுகுறித்து கேட்டபோது, திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பணிகளுக்கு அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துகிறாா்கள், அதன்படிதான் ஆயுஷ் மருத்துவமனையும் இருக்கிறது. பேரவைக் கூட்டத் தொடரில் இதுகுறித்து கேள்வி எழுப்ப இருக்கிறேன் என்றாா்.
இதுவரையிலான பணிகளும் வீணாக வாய்ப்பு: இதுகுறித்து இந்திய மருத்துவ முறை ஆா்வலா்கள் கூறியது: தோ்தலுக்கு முன்பே கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் திமுக அமைச்சா்கள், எம்எல்ஏக்களும் இதை பெரிதாக கவனிக்கவில்லை.
தற்போது கட்டுமான வளாகத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளரத் தொடங்கியுள்ள நிலையில், தவெக அரசு நிா்வாகமும் கண்டுகொள்ளாமல் விட்டால் இதுவரை நடந்த பணிகளும் வீணாகிப் போகும் அவலம் ஏற்படலாம்.
புதுக்கோட்டை மக்களின் நீண்டகாலக் கனவுத் திட்டங்களுள் ஒன்றான ஆயுஷ் மருத்துவமனையைக் கொண்டு வருவதில் விரைந்து உரிய கவனம் செலுத்துவது அவசர அவசியம் என்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.