முகப்பு
மகளிர்மணி

சீரகத் தண்ணீரில் இத்தனை நன்மைகளா?

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:44 AM
பகிர்:

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.

தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்றுவலிக்கும் தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம். அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைத் தூண்டும். பால் சுரப்பையும் ஊக்குவிக்கும். செரிமான பிரச்னைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும். கல்லீரலும் பலம் பெறும். உடல் ஆரோக்கியத்துக்கு இரும்பு சத்து மிக அவசியம்.

இரும்பு சத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும். சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் ரத்தசோகையை குணப்படுத்தும். சளி பிரச்னை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தொடர்ந்து இந்த நீரைக் குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.

சீரக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால், முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாகவும் இருக்கும். சீரகத்தில் உள்ள விட்டமின் "ஈ' சத்து இளமையை தக்கவைக்க உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு. முடியின் வேர்கள் வளர்வதற்கு உதவும். முடி உதிர்தலை தடுக்கும்.
 - பொன்.பாலாஜி 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.