முகப்பு
மகளிர்மணி

சாதனை சகோதரிகள்!

சென்னையைச் சேர்ந்த   பி.கே.எம்.கணேஷ்குமார்- ஜி.மேனகா ஆகியோரின் மகள்களான  ஜி.தன்யா ஸ்ரீ,  ஜி.தனிஷ்கா ஸ்ரீ என்ற  11 வயது இரட்டையர்கள் சமீபத்தில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்  சாதனைப் புத்தகத்தில் இடம்

Updated On : 27 அக்டோபர் 2021, 6:00 am IST
பகிர்:

சென்னையைச் சேர்ந்த பி.கே.எம்.கணேஷ்குமார்- ஜி.மேனகா ஆகியோரின் மகள்களான ஜி.தன்யா ஸ்ரீ, ஜி.தனிஷ்கா ஸ்ரீ என்ற 11 வயது இரட்டையர்கள் சமீபத்தில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சாதித்தது என்ன?

தன்யா ஸ்ரீ, பரதநாட்டிய முத்திரைகளான ஒரு கை முத்திரை, இரண்டு கைகள் முத்திரை, தலை முத்திரை என சுமார் 63 முத்திரைகளை 27.36 விநாடிகளில் செய்து காண்பித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தனிஷ்கா ஸ்ரீ , கண்ணை மூடிக் கொண்டு ஓவியம் வரைவதில் சாதனை படைத்துள்ளார். கண்ணைக் கட்டிக் கொண்டு ஓவியமா இதெப்படி சாத்தியப்பட்டது விளக்குகிறார் இவர்களது தாய் ஜி.மேனகா:

Advertisement

Advertisement

""தன்யா ஸ்ரீ, தனிஷ்கா ஸ்ரீ இருவருமே செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவருமே பள்ளியில் சேர்ந்த நாள் முதலே பள்ளியில் நடத்தப்படும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகள் என அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள். இந்த ஆர்வமே அவர்களை சாதனைப் புரிய தூண்டியது எனலாம்.

தன்யா கடந்த நான்கு ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்று வருகிறார். நாட்டியத்தில் உள்ள முத்திரைகள் அவளை ஈர்க்கவே அதையே சாதனையாக்கினாள்.

தனிஷ்காவுக்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். மண்டலா ஓவியங்களை மிக அற்புதமாக வரைவாள்.

அதுபோன்று, ஒரு சிறிய அளவிலான ஓவியத்தைப் பார்த்தாலும், அதை மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தி வரையக் கூடிய திறமையும் அவளிடம் இருந்தது. இதனால்தான், ஓவியத்தையே சாதனைக்காக தேர்வு செய்தாள்.

கண்ணை மூடி எப்படி ஓவியம் வரைகிறாள் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்காக பயிற்சி வகுப்புகள் எதுவும் செல்லவில்லை, வீட்டிலேயேதான் கற்றுக் கொண்டாள்.

முதலில், படம் வரைவதற்தான சார்ட்டை தரையில் ஓட்டிக் கொண்டு, அவளது கை பக்கவாட்டுக்கு ஏற்ப வண்ணங்களை வைத்துக் கொள்வாள். அதில் எந்தெந்த வண்ணங்களை எங்கெங்கு வைத்திருக்கிறாள் என்பதையும் மனதில் பதிந்து கொள்வாள்.

பின்னர், கண்ணை மூடிக் கொண்டதும், சார்ட் பேப்பரில் அவளது கை அளவை அடையாளமாக வைத்துக் கொண்டு அளந்து அளந்து வரைய தொடங்குவாள். ஓவியம் நன்றாக வரைய பழகியதும். சாதனைக்காக வரைந்தாள். ஓவியம் வரைய சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

நான் ஆச்சார்யா மான்டிசோரி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். அங்கே குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமில்லாமல், மூளையை தூண்டிவிட்டு அவர்களது தனித்திறமையை வெளிக் கொணரும் வகையில், பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படும்.

அதில் ஒருவகை, கண்ணைக் மூடிக்கொண்டு நுகர்வுத் திறன் மூலம் வண்ணங்களின் நிறத்தை சொல்லும் பயிற்சி. அதற்கு திவ்ய திருஷ்டி என்று பெயர். இதை அடிப்படையாக வைத்துதான் எனது மகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஓவியம் வரையும் பயிற்சியை அளித்தேன்.

இந்தியளவில் முதல்முறையாக சாதனை படைத்த இரட்டையர்கள் இவர்கள்தான். ஆனால், தனித்தனியாகதான் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இதைத்தவிர, இருவரும் பாப் இசை பாடல்கள் பாடுவதிலும் திறமை பெற்றவர்கள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.