தேசிய நலவாழ்வு குழும பணியில் திருநங்கை!
தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக தேசிய நலவாழ்வு குழுமத்தின் உதவியாளராக திருநங்கை தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டையை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை செவிலியர் ஆவார். தேசிய நலவாழ்வு குடும்பத்தின் கீழ் திருநங்கைகளுக்கான சிகிச்சை மையங்கள் மதுரை மற்றும் சென்னையில் உள்ளன. இவற்றில் சென்னையில் தமிழ்ச்செல்வி பணிபுரிய உள்ளார். இதற்கான ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
முதல் துபாஷி
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சபாநாயகரின் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டமன்ற அலுவலகத்தில் 1990- ஆம் ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் சபாநாயகர் அப்பாவுக்கு உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, 60 வயதாகும் அவர், மே மாதம் பணி நிறைவு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஆண்கள் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தநிலையில், பெண் ஒருவர் இந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். எனவே, இதன்மூலம் ராஜலட்சுமி சபாநாயகரின் முதல் பெண் உதவியாளராக கருதப்படுகிறார். ராஜலட்சுமி துபாஷ் சீருடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
மருத்துவருக்கு கல்பனா சாவ்லா விருது!
கல்பனா சாவ்லா விருது பெற்ற மருத்துவர் ப.சண்முகப்பிரியா, மதுரை அனுப்பானடி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அலுவலராக இருந்தவர். துணிவு, தைரியத்துடன் கரோனா நோய்ப் பரவலில் மருத்துவ சேவை செய்தவர். இரண்டாவது அலையின் போது 582 காய்ச்சல் முகாம்களில் பங்கேற்று 10,961 பேருக்கு ஸ்வாம் சோதனை மாதிரிகளை சேகரித்தவர். கரோனா தொற்றுக்கு ஆளாகி 2021, மே மாதம் காலமானார்.
இவரது சேவையைப் போற்றும் வகையில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.