வாழையின் சிறப்பு
வாழைத்தாரின் சீப்புகளில் உள்ள பழங்களைக் கவனித்தால், ஒவ்வொரு வாழைப்பழமும் சற்று மேல் நோக்கி வளைந்தபடி இருக்கும்.
முனைவர் ஜி. குமார்
வாழைத்தாரின் சீப்புகளில் உள்ள பழங்களைக் கவனித்தால், ஒவ்வொரு வாழைப்பழமும் சற்று மேல் நோக்கி வளைந்தபடி இருக்கும். கேரட், வெள்ளரி போன்ற காய்கறிகளோ நேரடியாக பூமியை நோக்கி இருக்கும். வாழையின் வளைந்த வடிவம் உண்மையில் புவி ஈர்ப்பு விசையை எதிர்ப்பது போன்ற தோற்றத்தைத் தரும். அது வாழை அழியாமல் இருக்க இயற்கை தந்த வரப் பிரசாதம்.
புவி ஈர்ப்பு விசையை ஏற்றிருந்தால் வாழைப் பழங்கள் கீழ் நோக்கி நேராகத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்த நிலை ஏற்பட்டிருந்தால் வாழைக்கான முக்கிய போஷாக்கான சூரிய ஒளியை அதற்குக் கிடைக்காமல் நிறுத்தியிருக்கும். எனவே, நிலைத்து வாழ வாழை ஒரு புரட்சிகரமான முடிவை எடுக்க இயற்கை உதவுகிறது. அதாவது, புவி ஈர்ப்பு விசை விதியையே வாழை கடைப்பிடிக்க மறுக்கிறது. தாவரவியலில் 'புவி தூண்டுத் திருப்பம்' என்று இந்த நிலையானது சொல்லப்படுகிறது.
Advertisement
Advertisement
வேர்கள் கீழ் நோக்கி வளர்ந்தாலும் தண்டுப் பகுதி மேல் நோக்கியே வளர்கிறது. ஆனால், வாழையில் ஏற்படுவது மிகவும் விநோதமானது. குறைவாகக் கிடைத்தாலும் இலையை மீறி எவ்வளவு ஒளியைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெற வாழைப்பழம் உடலை வளைத்து மேல்புறம் எழும்புகிறது.
அத்தனை பழங்களும் கீழ் நோக்கித் தொங்கியிருந்தால் கனமும் அதிகமாகி தார்களுடம் மரமும் கீழே விழும் நிலையே ஏற்பட்டிருக்கும். எனவே வளைந்த மேல் நோக்கிய உருவமே தாரில் வாழைப்பழங்களுக்கு வேண்டிய இடம் அளித்து ஒளியையும் எடுத்துக்கொள்ள முயற்சி செய்ய இயற்கை தந்த வடிவம்.