முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்! தொழ வேண்டிய கரங்கள்

ஐரோப்பாவில் 15-ஆம் நூற்றாண்டில்,  டூரர்-நிக்ஸ்டீன் என்று இரு ஏழை நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் என்று ஆவல் இருந்தது.

Updated On : 30 ஏப்ரல் 2022, 4:11 pm IST
பகிர்:

ஐரோப்பாவில் 15-ஆம் நூற்றாண்டில்,  டூரர்-நிக்ஸ்டீன் என்று இரு ஏழை நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் என்று ஆவல் இருந்தது.

ஒவ்வொரு நாளும் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடினமாக உழைத்து பின் ஓவியம் கற்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே, ஒருவன் வேலை செய்து அடுத்தவனை ஓவியம் படிக்க வைக்க வேண்டும்;  அவன் படித்து முன்னேறிய பின் அடுத்தவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.

யார் முதலில் ஓவியம் படிக்க வேண்டும் என்பதை சீட்டுப் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்தனர். அதன்படி டூரர் முதலில் ஓவியம் கற்கச் சென்றான். நிக்ஸ்டீன் வேலை செய்து தன் நண்பனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான்.

Advertisement

Advertisement

டூரர்,  ஓவியர்கள் பலரிடம் சென்று படித்து  சிறந்த ஓவியனாகத் திரும்பினான். வந்தவனுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. நிக்ஸ்டீன் கடினமான வேலைகளைச்செய்ததால், அவனுடைய விரல்கள் தடித்துப் போய், விகாரமாகக் காட்சியளித்ததோடு, இனி நுட்பமான ஓவியங்கள் எதுவும் அவனால் தீட்ட முடியாது என்பதையும் அறிந்து கொண்டான்.

ஆனால், நிக்ஸ்டீன் இதற்காகக் கவலைப்படவில்லை. மாறாக தன் ஆருயிர் நண்பன் டூரர் சிறந்த ஓவியனாக வெற்றி பெற்று திரும்பி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிஅடைந்தான். 

ஒரு நாள் டூரர் வரும்போது, நிக்ஸ்டீன் தன் அறையில் கைகூப்பியவாறு,  தன் நண்பனின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாக பிரார்த்தனை செய்து
கொண்டிருந்தான்.

இதைக் கண்ட டூரர் 'ஆஹா... இவன்றோ ஆருயிர் நண்பன். நமக்காகப் பல இன்னல்களை அனுபவித்தும், நம் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்
கொண்டிருக்கிறானே...' என்று நினைத்து உள்ளம் நெகிழ்ந்தான்.

உடனே தன் நண்பனின் தொழும் நிலையிலிருந்த அன்புக் கரங்களை அப்படியே ஓவியமாகத் தீட்டினான். அந்தக் கரங்களைப் பற்றிய அவன், "இந்தக் கரங்கள்தான் என் வாழ்நாள் முழுவதும் நான் தொழ வேண்டிய கரங்கள்'' என்றான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments