மூன்றரை ஏக்கர் நிலத்தில் ஒரு பிரமாண்ட ஆலமரம் "உலகின் மிகப் பெரிய ஆலமரம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. தாய் மரத்தின் வயது இருநூற்று ஐம்பது ஆண்டுகள் என்பதோடு, அதன் உயரம் 24.5 மீ. (74 அடி) ஆகும். பருமன் (சுற்றளவு) ஐம்பது அடி. இந்த மரம் கொல்கத்தாவுடன் இணைந்திருக்கும் ஹவுராவின் ஷிவ்பூர் தாவரவியல் பூங்காவில்தான் உள்ளது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, இந்தப் பூங்கா "ராயல் இந்தியன் பொட்டானிக்கல் கார்டன்' என்று அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததும் "இந்தியத் தாவரவியல் பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2009 லிருந்து புகழ்பெற்ற தாவரயியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் நினைவாக , "ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்கா' என அழைக்கப்படுகிறது. பூங்காவில் ஒரு பகுதியில் "வங்க அறிவியல், பொறியியல் பல்கலைக்கழகம்' செயல்படுகிறது.
ஆண்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட சூழல் குடியிருக்கும் இந்தப் பூங்காவில் உலகப் புகழ் பெற்ற புராதன ஆலமரக் குடும்பத்துடன் 1,400 இனங்களைச் சேர்ந்த அரிய மரங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன.
ஹவுராவின் மிகப் பெரிய ஆலமரக் குடும்பம் போல புதுச்சேரி ஆரோவில் வளாகத்திலும் குட்டி ஆல மரக் குடும்பம் பெரிய ஆல மரக் குடும்பமாக விரிவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஒரு ஆலமரத்தின் விழுதுகள் மண்ணில் ஊன்றி இன்னொரு ஆலமரமாகும். இப்படி பல ஆலமரங்கள் விழுதுகள் மூலமாகத் தோன்றி, சங்கிலித் தொடராகப் பெரிய தோப்பாகும். அதனால்தான் தமிழர்கள் திருமணங்களின் போது புதுமணத்தம்பதியின் குடும்பம் " ஆல் போல் தழைக்க..' என பெரியவர்கள் வாழ்த்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.