செல்வராகவன் லைன் அப்!
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் 'ஆர்யன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடன் ஷரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வெற்றியடைந்துள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் செல்வராகவன் அவர் இயக்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்தும், அவருடைய மற்ற லைன் அப் குறித்தும் பேசியிருக்கிறார்.
'ஏ. ஐ. மூலமாக சோகமான முடிவு கொண்ட கிளைமேக்ஸ் காட்சிகளை சமீப காலமாக மாற்றி வருகிறார்கள். அதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?' என எழுப்பிய கேள்விக்குப் பதில் தந்த செல்வராகவன், 'தவறான விஷயமது. இங்க மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும் அது நடக்கிறது. ஒரு படம் வெளியானதும் அதை அப்படியே விட்டு விட வேண்டும்.
Advertisement
எந்த கிளைமேக்ஸை முதலில் வைத்திருந்தமோ, அது அப்படியே இருக்க வேண்டும். யாருக்காகவும் அதை மாற்றக் கூடாது. இப்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் வேலைகள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட அந்தப் படத்தின் வேலைகள் முடிந்து விட்டது. அந்தப் படத்தில் ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். உங்களுக்கு அந்தப் படத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தினால்தான் நானும் 'பார்ட் 2' எடுக்கச் சம்மதித்தேன். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது.
இன்னும் கொஞ்சம்தான் முடிக்காமல் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் படத்தையும் பார்ப்பீர்கள். 'புதுப்பேட்டை 2'-வும் கூடிய விரைவில் ஆரம்பிப்பேன். 'ஆயிரத்தில் ஒருவன் 2' பற்றி கார்த்தியிடம் பேச வேண்டும். நிச்சயமாக அதுவும் நடக்கும். எல்லாவற்றையும் யோசித்து வருகிறேன்' எனப் பேசியிருக்கிறார்.