வள்ளலாரை வணங்கிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.
இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருந்த சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு நடிகர் சிலம்பரசனின் கார் வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்தியஞான சபைக்குள் நுழைந்தது.
Advertisement
அதிலிருந்து இறங்கிய சிலம்பரசன் தர்மசாலை, அணையா அடுப்பு போன்றவற்றை தரிசனம் செய்தார். பின்னர் சத்தியஞான சபை வளாகத்தில் அமர்ந்து, சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தார். அதையடுத்து அணையா விளக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் உள்ள திருவறை, வள்ளலார் தண்ணீரைக் கொண்டு விளக்கெரியச் செய்த நற்கருங்குழி போன்ற இடங்களையும் தரிசனம் செய்தார்.