முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேடித் தேடி...

'பாரம்பரியச் சின்னங்களை பதிவு செய்யாமல் விட்டால் அவை மறைந்து போகும் அபாயம் உள்ளது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:01 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:11 PM

'பாரம்பரியச் சின்னங்களை பதிவு செய்யாமல் விட்டால் அவை மறைந்து போகும் அபாயம் உள்ளது. அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. அழிந்து வரும் கோயில்களின் வரலாறும், கலைச்செல்வங்களும் எதிர்வரும் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும்'' என்கிறார் ஆ.திலகவதி.

இவர் தமிழ்நாட்டின் பாரம்பரிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களைத் தேடி, அவற்றைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், ஈரோட்டில் வசித்து வருகிறார். சமூகப் பணியாக காமிராவை கையில் எடுத்துச் சுற்றும் எம்.ஏ. பட்டதாரியான திலகவதியிடம் பேசியபோது:

Advertisement

'ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஆர்வத்தில் புகைப்படப் பயணத்தைத் தொடங்கினேன். அது இன்று பொறுப்பான வரலாற்றுப் பணியாக மாறியுள்ளது.

கரூர், திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கோயில்களுக்கு நேரில் சென்று, அவற்றின் தலபுராணம், கல்வெட்டுப் பதிவுகள், சிற்பக் கலை அம்சங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்து முழுமையான ஆவணமாகப் பதிவு செய்துள்ளேன். இந்த முயற்சியை சாதாரண பதிவாக அல்லாமல், மறைந்து போகும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டைத் தாண்டி, தில்லி, கர்நாடகத்தில் உள்ள ஹம்பி, கொல்கத்தா, சிக்கிம், காஞ்சன்ஜங்கா போன்ற பல்வேறு முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்து அங்குள்ள வரலாற்றையும், இயற்கைச் சிறப்புகளையும் பதிவு செய்துள்ளேன். பாரம்பரிய திருவிழாக்கள், கலாசார நிகழ்வுகளை புகைப்படமாகப் பதிவு செய்கிறேன்.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குலசை தசரா திருவிழா போன்ற பாரம்பரிய விழாக்களுக்குச் செல்கிறேன். ஆன்மிகமும் கலாசார அம்சங்களையும் புகைப்படங்கள் எடுத்து வெளிப்படுத்தி வருகிறேன். தற்போது இந்தப் பணிகள் ஐந்து மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 119 குடைவரைக் கோயில்களைத் தனிப்பட்ட முறையில் தேடிச் சென்று புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளேன். இந்தப் பணியின் தொடர்ச்சியாக, கேரளத்திலும் உள்ள குடைவரைக் கோயில்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணியையும் வெற்றிகரமாக முடித்துள்ளேன். இந்த அனுபவங்களின் தொகுப்பாக 'குடைவரை கிளிக்ஸ்' என்ற புகைப்பட நூலை வெளியிட்டுள்ளேன்.

ஒவ்வொரு குடைவரையும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது, அதைக் கட்டிய மன்னர்களின் பெயர்கள், கட்டப்பட்ட காலகட்டம், குடைவரைகளின் பெயர்கள் உள்ளிட்டவை தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அனைத்துப் புகைப்படங்களும் கலர் பிரிண்ட் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், பல அதிகாரிகள் இந்தப் புத்தகத்துக்கு பாராட்டுக் குறிப்புகளையும் அளித்துள்ளனர்.

அணுக முடியாத இடங்கள், மலைப்பாதைகள், பாதுகாப்பு சவால்கள் போன்ற பல தடைகளைத் தாண்டியும் இந்தப் பணியை அர்ப்பணிப்போடு செய்துள்ளேன்.

இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் நான் பதிவிடுவதால், அவை பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமூக ஊடகங்களைப் பார்க்கும் பலரும் கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களைக் கவனித்து புகைப்படம் எடுத்து அவருடன் பகிர்கிறார்கள். 'உங்களைப் பார்த்துத்தான் இந்தப் புகைப்படங்களை எடுக்கத் தோன்றியது. உங்களால்தான் கோயில்களில் உள்ள சிற்பங்களைக் கவனிக்கத் தொடங்கினோம்' என்று எனக்குத் தகவல்களை அளிப்பர். எனது பணிகளுக்கு எனது கணவர் ஆறுமுகமும், இரு குழந்தைகளும் உறுதுணையாக உள்ளனர்'' என்கிறார் ஆ.திலகவதி.

-பா.சுஜித்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.