அகமதாபாத்தில் யோகாவில் அசத்திய மாணவர்கள்!
அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்'' என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி.ராம்குமார்.
அவரிடம் பேசியபோது:
'அகமதாபாத்தில் ஜூன் 4 முதல் 8-ஆம் தேதி வரையில் ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியில் தொடங்கிவைத்தார். 79 நாடுகளைச் சேர்ந்த 522 வீரர்கள் பங்கேற்றனர். 10 வயது முதல் 55 வயதுக்குள்பட்டோர் பிரிவுகளில் தனிநபர், இரட்டையர், குழுப் போட்டிகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
முன்னோக்கி வளைதல், பின்னோக்கி வளைதல், உடல் திருப்புதல், கை சமநிலை, கால் சமநிலை, மல்லாந்து படுத்த நிலையில் செய்யப்படும் பயிற்சிகள் போன்ற சிறப்புப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 31 நாடுகள் குறைந்தது ஒரு பதக்கத்தையும், 10 நாடுகள் குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றன. உலகில் பல்வேறு நாடுகளில் யோகா போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் 102 தங்கம், 9 வெண்கலம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டுப் பேர் பதக்கங்களை வென்றனர்.
சென்னை போரூர் செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் ஜே.முகிலன், ஆவடி எவர்கிரீன் வித்யாஷ்ரம் பள்ளியில் எட்டாம் வகுப்புப் பயிலும் எஸ். பிரணவ் ஆகிய இருவரும் எங்கள் மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இருவரும் இரு தங்கப் பதக்கங்களை வென்றனர். இதுதவிர, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கே.சர்வேஷ்,
கே. திவேஷ், ஆவடி வேலம்மாள் பள்ளி மாணவர் நிதிஷ் குமார், கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவர் ஹெச்.விகான், கரூரைச் சேர்ந்த எஸ்.ஹேமா
மாலினி ஆகிய 4 பேர் தலா இரு தங்கப் பதக்கங்களையும், கோவையைச் சேர்ந்த எஸ்.வைஷ்ணவி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.தர்ஷினி ஆகிய 2 பேர் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.
எங்கள் மையத்தில் பயிற்சி பெற்ற முகிலன், பிரணவ் ஆகிய இருவரின் சாதனைக்கு பயிற்சியாளர் டி.அனிதாவின் ஊக்குவிப்பும் காரணமாகும்.
யோகாவை பிரபலப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு முதல் யோகா வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும் யோகா பயிற்சியால் வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்'' என்கிறார் ராம்குமார்.