திரைக் கதிர்! வியக்க வைக்கும் ஜேசன் சஞ்சய்யின் பொறுமை!
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 94-ஆவது வயதில் 'சிங்கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் 94-ஆவது வயதில் 'சிங்கீதம்' என்ற தெலுங்குப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கமல்ஹாசன், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவுடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
'பொதுவாக நாங்கள் வெயில் கொளுத்தும் ஸ்டூடியோக்களில் வியர்த்து விறுவிறுக்க வேலை பார்த்துப் பழகியவர்கள். ஆனால், 'புஷ்பக விமானம்' திரைப்படத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முழுமையாக ஏசி வசதியிலேயே எடுத்தோம். படம் முழுக்க வசனமே இல்லை என்று மற்றவர்கள் எங்களைப் பாராட்டினார்கள். ஆனால் எங்களுக்கோ படம் முழுக்க ஏசியில் வேலை செய்ததே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நாள்களை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'. இதில் விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
Advertisement
Advertisement
இப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனியிடம், 'இந்தப் படத்தில் விவசாயியாக நடித்திருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், 'எனக்குப் பிடித்தது எளிமையான வாழ்க்கைதான். தொழில் காரணமாகத்தான் சென்னையில் இருக்கிறேன். கிராமத்து வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்துக்கு வரலாம். அங்கு மால் இருக்கிறது என்றெல்லாம் நினைக்காதீர்கள்.
இங்கு ஒன்றுமே இல்லை. கிராமத்தில்தான் நல்ல காற்று, மக்கள் எல்லாம் இருக்கிறார்கள். அங்கு பரபரப்பு இருக்காது. கிராமத்து மக்கள் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை நல்ல வாழ்க்கை' என்று பேசியிருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க ராஜூ சுந்தரம், சம்பத், அன்புதாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் தொடர்பாகப் பேட்டியளித்திருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன்.
அந்தப் பேட்டியில் அவர், 'சஞ்சய் மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். அவரும் அவருடைய குழுவும் நீண்ட காலமாக இந்தப் படத்துக்காக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இதன் ஆரம்பகட்ட வேலைகளையும், எடிட்டிங் வேலைகளையும் மிக விரிவாகச் செய்தார்கள். சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவரின் அந்தப் பொறுமை என்னைப் பிரமிக்க வைத்தது. பொறுமையாகவும், அமைதியாகவும், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் தெளிவாகவும் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.