முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

Updated On : 31 மே 2026, 1:09 pm IST
பகிர்:

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

ரெங்கநாதன்-சுகன்யா தம்பதியின் மகளான ஆரண்யா, நான்கரை வயது முதல் செஸ் ஆடி வருகிறார். கரோனா காலத்தில் வீட்டில் சாதாரணமாக ஆடத் தொடங்கிய அவர், அடிமட்ட அளவில் மாவட்ட, மாநில போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று ஆடினார்.

சிறந்த அனுபவம், கடுமையான மன உறுதி, குடும்பத்தினர் ஆதரவுடன் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று முத்திரை பதித்து வருகிறார். மாநில அளவில் யு-9

Advertisement

Advertisement

வயதுப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஆரண்யா, மைசூரில் நடைபெற்ற தேசிய யு-7 சிறுமியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதோடு, சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார்.

தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற ஆசிய யூத் செஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஆரண்யா, தற்போது யு-8 சிறுமியல் பிரிவில் நாட்டின் நம்பர் 1 வீராங்கனையாவார். உலகளவில் 11-ஆவது இடத்தில் உள்ளார். ஏழு வயதில் பிடே தரவரிசையில் 1753 புள்ளிகளை ஈட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். வைஷாலி ராம்பாபுவைப் போல், எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வெல்லப் போகும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் ஆரண்யா.

செஸ் வரலாறு

நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் அரசர்கள் ஆடும் ஆட்டமாக சதுரங்கம் இருந்தது. 64 சதுரங்கள் கொண்ட ஒரு பலகையில் இருவர் ஆடும் ஆட்டம்தான் இது. வெள்ளை, கறுப்பு நிறக்காய்களுடன் ராஜா, ராணி, 2 அமைச்சர்கள், 2 குதிரைகள், 2 கோட்டைகள், 8 படைவீரர்கள் இடம் பெறுகின்றன. இங்கிருந்து ஐரோப்பா, அரபு நாடுகள், ரஷியா, கொரியாவுக்கு செஸ் பரவியது. 15-ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் செஸ் ஆட்ட நகர்த்தல் வரைமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) மூலம் செஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1886-இல் முதல் அங்கீகரிக்கப்பட்ட உலக செஸ் சாம்பியன் வில்ஹெல்ம் ஸ்டீனிஸ். தற்போது உலக சாம்பியனாக இந்தியாவின் டி. குகேஷ் உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆர்மீனியா, உக்ரைன், ஆசிய நாடுகளான கொரியா, சீனா, மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், ரஷியா போன்றவை செஸ் வல்லரசுகளாகத் திகழ்கின்றன. இந்தியாவில் செஸ் என்றாலே நினைவுக்கு வரும் விஸ்வநாதன் ஆனந்த், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மகளிர் பிரிவில் கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, தமிழ்நாட்டின் வைஷாலி உள்ளிட்டோர் சிறந்து விளங்குகின்றனர். கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு ரசிகர்கள் உள்ளதைப் போல், செஸ்ஸுக்கும் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர்.

-பா.சுஜித்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.