நல்வினை நீங்கினால் தீவினை நிலைபெறும்
விளக்கானது ஓரிடத்திலே செல்லவும், அங்கே அதற்கு முன்னர் இருந்த இருளானது முற்றவும் அழிந்துபோவது போல, ஒருவனுடைய தவமாகிய ஒளியின் முன்னே பாவமாகிய இருளும் நில்லாது அழிந்து போய்விடும்.
விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்,-விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம், தீது.
( பாடல் 51 அதிகாரம்: துறவு )
விளக்கானது ஓரிடத்திலே செல்லவும், அங்கே அதற்கு முன்னர் இருந்த இருளானது முற்றவும் அழிந்துபோவது போல, ஒருவனுடைய தவமாகிய ஒளியின் முன்னே பாவமாகிய இருளும் நில்லாது அழிந்து போய்விடும்.
விளக்கின் நெய் குறைந்துபோனவிடத்து ஒளி மறைய நேர்ந்தால் அப்படி நேர்ந்தவுடனே இருள் அங்குச் சென்று பரவுவது போல, நல்வினைகள் நீங்கியிருக்கும் ஒருவரிடத்திலே, தீயசெயல்களும் விரைந்து சென்று பரவி நிலைபெற்றுவிடும்.