முகப்பு
வெள்ளிமணி

பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள்

பிருகு முனிவர். தவம் செய்ய அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். வன்னி மரக் காடான சமீவனம் பகுதிக்கு வந்தவர், தாம் தவம் செய்யத் தகுதியான இடம் என அதனைத் தேர்ந்தெடுத்து, பெருமானைக் குறித்து தவம் புரியலானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

பிருகு முனிவர். தவம் செய்ய அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். வன்னி மரக் காடான சமீவனம் பகுதிக்கு வந்தவர், தாம் தவம் செய்யத் தகுதியான இடம் என அதனைத் தேர்ந்தெடுத்து, பெருமானைக் குறித்து தவம் புரியலானார். சிந்தையில் ஸ்ரீமந் நாராயணன் நிறைந்திருக்க, அவரது சிந்தனையைக் கலைக்கும் வகையில் பெரும்படை ஒன்று அங்கே வந்தது.

சிங்க வேட்டைக்கு வந்த மன்னன் சோழனின் படைகள் எழுப்பிய கூச்சல்தான் அது. இதனால் அங்கே அமைதி குலைந்தது. முனிவரின் தவமும் கலைந்தது. சினம் மிகக் கொண்டார் பிருகு முனிவர்.

சோழனைப் பார்த்தார்... "முனிவர்கள் தவம் செய்யும் அமைதியான சூழலைக் கெடுத்து, தவத்துக்கு இடையூறு விளைவித்தாய். எந்த சிங்கத்தைத் தேடிக்கொண்டு வேட்டையாட இங்கே வந்தாயோ, அதே  சிங்கத்தின் முகத்தை நீ பெற்று காட்டினில் அலைவாய்'' என்று சாபம் கொடுத்தார்.

இதனைக் கேட்ட மன்னன் மிகவும் வருந்தினான். தனது செயலை எண்ணி வருந்திய அவன் தனக்கு சாப விமோசனம் அளிக்கும்படி முனிவரை சிரம் பணிந்தான். மனம் இரங்கினார் பிருகு முனிவர்.  சாபத்தில் இருந்து விடுபடும் வழியையும் கூறினார்.

"தைப்பூசத் திருநாளில், விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் எனப்படும் இந்தத் தலத்தில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்து வழிபட்டால், அப்போது, பெருமாள்  கருடன் மீதமர்ந்து காட்சி தருவார். மயில் மீது முருகனும் அமர்ந்து காட்சி தர, சாப விமோசனம் கிட்டும். அதன்பின்னர், பெருமானுக்கு சிம்ம, ரிஷப, மயூர, அன்ன, மேஷ வாகானாதிகள் உள்பட 108  வாகனங்கள் அமைத்து பெருவிழாவை நடத்த வேண்டும்'' என்றார்.

அதன்படி சோழனும் பெருமாளை நினைந்து மனமுருகி வழிபட்டு வந்தான். மனமகிழ்ந்த பெருமாளும் கருட வாகனத்தில் காட்சி தந்து அருள்புரிந்தார். அதன்மூலம், மன்னன் சிங்க முகம் மாறி பழைய  நிலை அடைந்தான்.

அங்கே பெருமாள் கருட வாகனத்தில் இருப்பதாகவே கோயில் கொண்டார். இந்தக் கோயில் மிருகசீர்ஷ நட்சத்திரக் கோயிலாக, பரிகாரத் தலம் ஆனது. எண்கண் என்ற இந்தத் தலம் முருகனின் புகழ்பெற்ற தலமாகத் திகழ்கிறது.

இங்கே பெருமாள் ஆதிநாராயணப் பெருமாள் எனப்படுகிறார். உற்ஸவர் ஆதிநாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராகக் காட்சி தருகிறார். வன்னி மரமே தல விருட்சமாகக் கொண்டுள்ளது. திருவாரூர்  மாவட்டம் எண்கண் என்ற தலத்தில் திகழ்கிறது நாராயணரின் இந்தக் கோயில்.

பொதுவாக, பெருமாள் கோயில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நிலைகளிலும், சிறப்பம்சமாக நடந்த நிலை எனப்படும் திரிவிக்ரம அவதார நிலையிலும் தரிசனம் தருவார்.

பெருமாளின் எதிரே பெரிய திருவடியான கருடாழ்வார், நின்ற நிலையில் கைகூப்பியபடி காட்சி தருவார். திருவிழாக் காலங்களில் உற்ஸவ மூர்த்திகள் மட்டும் கருடாழ்வாரின் மீதேறி கருட வாகனராக  சேவை சாதிப்பார். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் விசேஷமாக, கருவறையிலும் கூட பெருமாள் கருட வாகனராகக் காட்சி தருகிறார்.

சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு உடனே செவி சாய்க்கும் விதத்தில், கருட வாகனத்தில் பறந்து வந்து காட்சி தந்ததால், சோழன் அதே நினைவில் பெருமாளுக்கு இங்கே கோயில் எழுப்பினானாம்.  எனவே இங்கே கருவறையில் மூலவர் பெருமானும் நித்திய கருடசேவையாக பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

இங்கே கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். கோயில் பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

தல சிறப்பு: மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று இந்தத் தலப் பெருமாளை வழிபாட்டால், அவர்களின் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்தத் தலத்தின் பெருமாளை, மிருகண்டு மகரிஷி தினந்தோறும் அருவ வடிவில் வழிபடுகிறார் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை: மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கான தோஷங்கள் நீங்க பெருமாளை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை ஏற்பட்டு திண்டாடுபவர்கள், நாக  தோஷம் உள்ளவர்கள், தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பம் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி குடும்பத்தில் ஏற்பட்ட மரண நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பெüர்ணமி மற்றும் மிருகசீரிஷ நட்சத்திர நாட்களில் இங்கே வந்து வழிபடுகிறார்கள். ஏற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக் கிழமைகளில்  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ய வேண்டிக் கொள்கிறார்கள்.

திருவிழா: வைகுண்ட ஏகாதசி, கருட பஞ்சமி, கோகுலாஷ்டமி, ராம நவமி உள்ளிட்ட விழாக்கள்.

தகவலுக்கு: அர்ச்சகர் வி.ராஜு, 94433 51528

முழு கட்டுரையைப் படிக்க →