தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் மகா குபேர யாகம்!
இலங்கையில் ஆட்சி புரிந்த குபேரன், ராவணனால் நாடு, நகரம் அனைத்தையும் இழந்து வடக்கே வன்னிக்காட்டுப் பகுதி ஒன்றுக்கு வந்தான்
இலங்கையில் ஆட்சி புரிந்த குபேரன், ராவணனால் நாடு, நகரம் அனைத்தையும் இழந்து வடக்கே வன்னிக்காட்டுப் பகுதி ஒன்றுக்கு வந்தான். அவ்விடத்தில் இறைவன், சுயம்பு திருமேனியுடன் தோன்றி அமலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்கினார். இறைவனின் மீது பற்றுகொண்ட குபேர பகவான், அமலேஸ்வரர் எனப்பட்ட தஞ்சைபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டு வந்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சி அளித்து நவநிதிகளையும் வழங்கி அருள்புரிந்தார். இறைவனின் அருள் பெற்ற குபேரன் உருவாக்கிய நகரமே அழகாபுரி ஆகும். அந் நகரமே பின்னாளில் மாமன்னன் ராஜராஜன் உருவாக்கிய புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் அமைந்துள்ள தஞ்சாவூர் ஆகும்.
பழைமை வாய்ந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு கடந்த 1883 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. மேற்கு நோக்கிய ஆலயம் இது! ஆலயத்தின் இறைவன் தஞ்சபுரீஸ்வரர்ó; இறைவி ஆனந்தவல்லி. தல விருட்சம் வன்னி மரம். சிவாலய விதிமுறைப்படி அனைத்து பரிவார மூர்த்திகளும் அமையப்பெற்று அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குபேர யாகம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி அமாவாசை அன்று இந்த ஹோமத்தை நடத்துகின்றனர். அச்சமயம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தடைபட்ட காரியங்கள் விரைவாக கைகூடவும் இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் பொருளாதாரம், வளம் பெற்று சுபிட்சம் காணவும் இந்த ஹோமத்தில் பக்தர்கள் பங்கு கொள்கின்றனர். வரும் ஐப்பசி மாதம் (23.10.2014) அமாவாசையை முன்னிட்டு (தீபாவளிக்கு மறுநாள்) மாலை 04.30 மணிக்கு மகா குபேர யாகம் தொடங்கி நடைபெறுகிறது. பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் பொருள் வளமும் அருள் நலமும் பெற இந்த யாகத்தில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
Advertisement
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில். இவ்வாலயம்,தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
தொடர்புக்கு: 04362 223384.