கருவில் துள்ளிய குழந்தை!
திருமுழுக்கு யோவானின் தாய் எலிசபெத். இயேசுவின் தாய் மரியாள். இவ்விருவரின் தாய்மை பற்றிய வரலாறு வேதாகமத்தில் மிகச் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது.
திருமுழுக்கு யோவானின் தாய் எலிசபெத். இயேசுவின் தாய் மரியாள். இவ்விருவரின் தாய்மை பற்றிய வரலாறு வேதாகமத்தில் மிகச் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத்தின் கணவர் பெயர் சகரியா ஆசாரியர். அவர் 100 வயதானவர். அவரது தொழில் ஆலயத்தில் ஊழியம் செய்தல், தொழுகை நடத்துதல், வாசனை தூபம் காட்டுதல், காணிக்கைகளை ஆலயத்தில் வைத்து வழிபடுபவர்களை ஆசீர்வதிப்பது, கடவுளுக்கு பலியிடுவதை ஒழுங்குபடுத்துவது, வந்தவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்காக ஜெபம் செய்வது ஆகியவை அவரது பணிகளாகும்.
அவரது மனைவி எலிசபெத்துக்கு 90 வயது நெருங்கியிருந்தது. இளம் வயதில் அவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை. அவள் பிள்ளை வரம் கேட்டு ஜெபம் செய்து, பல ஆண்டுகள் நீண்டன.
வயதான காலத்தில் இறைவனின் இரக்கம் அவள் மேல் வந்தது. கணவர் சகரியா ஆசாரியர் தம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்தில் தூபம் காட்டும் போது, ஒரு தேவ தூதன் அவர் முன் தோன்றி ""உம்முடைய ஜெபத்தைக் கடவுள் கேட்டார். உனக்கு உன் மனைவி எலிசபெத் மூலம் ஒரு புனித மகன் பிறப்பான். அவனுக்கு "யோவான்' என்று பெயரிடுவாயாக!'' என்றார்.
சகரியா ஆசாரியர் நம்ப முடியாதவராக இருந்தார். ""தேவனாலே ஆகாத காரியம் ஒன்றுமில்லை!'' என்றார் தேவதூதன் (லூக்கா - 1: 37).
அவ்வாறே வயதான எலிசபெத் கருவுற்றார். கர்த்தர் தன் ஜெபத்தைக் கேட்டார் என்று மிகவும் மகிழ்ந்து, கடவுளைத் தொழுதார்.
மரியாள் 12 வயதான கன்னிப் பெண். யோசேப்பு என்பவருக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தார். கர்த்தர் அவர் மேல் இரக்கம் கொண்டார். மானிட உருவாய் இயேசுவை கருவில் சுமக்கப் பணித்தார்.
தெய்வ பக்தியுள்ள மரியாள் இறைவனின் கட்டளைக்கு ஓர் அடிமையைப் போல் பணிந்து, ""இறைவன் சொற்படியே ஆகக்கடவது!'' என்றார். பரிசுத்த ஆவியால் கருவுற்ற மரியாள், தமது உறவினரான எலிசபெத் முதிர்ந்த வயதில் கருவுற்றாள் என்று அறிந்து அவரைச் சந்திக்க மலை நாட்டிற்குச் சென்றார். மரியாள் தன் இல்லம் தேடி வந்ததைக் கண்டு, எலிசபெத் மிக மகிழ்ந்தாள். மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாய் என அறிந்தாள். மரியாளைத் தொட்டதும், எலிசபெத்தின் வயிற்றில் கருவாக இருந்த குழந்தை துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
""இது என்ன ஆச்சரியம்? இறைவனின் தாய் என்னிடத்தில் வரும் பேறு பெற்றேனே!'' என எலிசபெத் மகிழ்ந்து, மரியாளின் கர்ப்பத்தை உறுதி செய்தார். இறைவனை இருவரும் போற்றிப் புகழ்ந்தனர்!