திருப்பெருந்துறையில் திருமஞ்சனப் பெருவிழா!
திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.
திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகர் கட்டியதுதான் ஆவுடையார் கோவில் என்றழைக்கப்படும் திருப்பெருந்துறை ஸ்ரீ யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில்.
வழக்கமாக பெரும்பாலான சிவத்தலங்கள் கிழக்கு நோக்கியும், சில மேற்கு நோக்கியும் இருக்கும் நிலையில் ஆத்மநாத சுவாமி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது.
கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியன இந்தக் கோயிலில் கிடையாது. சண்டேசுவரருக்கும் சந்நிதி இல்லை. மூலவரான ஆத்மநாதர் வழக்கமான சிவாலயங்களிலுள்ள லிங்கத் திருமேனியாக இல்லாமல், வெறும் பீடமாகவே காட்சி தருகிறார். அதேபோல அம்பாளான யோகாம்பிகையும் உருவமாக அல்லாமல், யோகபீடமாகவே காட்சி தருகிறார்.
Advertisement
Advertisement
வழக்கமான சிவத்தலங்களில் சோமாஸ்கந்தர் அல்லது சந்திரசேகரர் மற்றும் விநாயகர், முருகன், அம்பாள், சண்டேசுவரர் ஆகிய மூர்த்திகளுக்குத்தான் விழா கொண்டாடப்படும். ஆனால், இங்கு மாணிக்கவாசகருக்குத்தான் அனைத்து விழாக்களும். சுவாமிகளுக்கு உரிய வாகனங்கள், தேர் உள்ளிட்டவற்றில் மாணிக்கவாசகரே வைக்கப்பட்டு திருவீதியுலா நடத்தப்பட்டு வருகிறது. புழுங்கல் அரிசிச் சோற்றுடன் பாகற்காயும், கீரையும் படைக்கப்படுவது அநேகமாக இந்தக் கோயிலில் மட்டுமே.
சிற்பங்கள்: ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோயில் பிரகாரங்களிலுள்ள தூண்களும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள நுட்பமான சிற்பங்களும் மிகப்பிரம்மாண்டமானவை. குதிரையைக் கட்டுப்படுத்தும் கயிறுகூட அப்படியே அச்சு அசலாக முறுக்குகளோடு நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, அக்காலத்திலேயே மாட்டிக்கொள்ளும் விதமான காலணிகள் இருந்ததும் கூட மிகச் சிறிய வீரனின் சிலையாக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இன்னொன்று வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய கட்டடக் கலைநுட்பம் கொடுங்கைகள். தற்போது "சன்சைடு' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தாழ்வாரக் கூரை அமைப்புகள்தான் இவை. கல்லிலேயே வடிக்கப்பட்டு, 13.5 அடி நீளம், 5 அடி அகலம், இரண்டரை அடி கனமும் கொண்டவை இந்தக் கொடுங்கைகள். அக்காலக் கட்டடக் கலையின் பிரம்மாண்டம்.
இக்கோயிலின் பின்புறம் ஒரேயொரு குருந்த மரமும், அதன் நிழலில் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் அருளும் காட்சியும் சிலையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சி அப்படியே கோயிலுக்குள் கற்சிற்பமாக செதுக்கியும் வைக்கப்பட்டுள்ளது.
திருவாசகம் பிறப்பு: மாணிக்கவாசகர் இங்கு வந்துதான் திருவாசகத்தை எழுதத் தொடங்கினார் என்பது இக்கோயிலின் சிறப்பு. 9-ஆம் நூற்றாண்டில் பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சராக இருந்த வாதவூரார், சோழநாட்டில் நல்ல குதிரைகள் கிடைப்பதாக அறிந்து, அவற்றை வாங்கி வருவதற்காக பொன்னுடன் படைபரிவாரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் திருப்பெருந்துறையில் குருந்த
வனத்தில் } குருந்த மர நிழலில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இங்கேயே தங்கி திருவாசகத்தை எழுதத் தொடங்கியதாகவும் வரலாறு.
குதிரைகளை வாங்கி வரச்சென்ற வாதவூராரை மன்னரிடமிருந்து காப்பாற்ற சிவபெருமானே நரிகளைப் பரிகளாக்கி (குதிரைகளாக்கி) கொண்டு சென்றது புராணக் கதை. திருவாசகத்தின் 20 பகுதிகள் திருப்பெருந்துறையில் இருந்து எழுதப்பட்டவை.
திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சனம் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா.
நிகழாண்டில் வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான வெள்ளி ரிஷப வாகனம் ஜூன் 18 -ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி திருக்கோயில்.
- சா. ஜெயப்பிரகாஷ்