ரூ.33 ஆயிரம் கோடி இழப்பீடு: ஈரான், அல் காய்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என
நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஈரான் மற்றும் அல் காய்தா, தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானவர்களில் 47 பேரின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் டேனியல்ஸ் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், ஈரான் மற்றும் தலிபான், அல் காய்தா, லெபானன் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா ஆகியவை, இரட்டைக் கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 600 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.33 ஆயிரத்து 267 கோடி) வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் மதத்தலைவரான அயதுல்லா அலி கமேனியும் இந்தப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஈரான் தொடர்ந்து மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானங்களைக் கடத்தியவர்கள், ஈரானில் இருந்து செயல்பட அனுமதித்ததாக, ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.