அமெரிக்காவில் ஆண்ட்ராய்ட் போன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு: சீனாவுக்கு பங்கு?
அமெரிக்காவில் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் போனில் உள்ள தகவல்கள் ரகசிய மென்பொருள் ஒன்றின் மூலம் திருடப்பட்டு சீனாவில் உள்ள கணிணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அதிர்ச்சித் தகவல்...
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் போனில் உள்ள தகவல்கள் ரகசிய மென்பொருள் ஒன்றின் மூலம் திருடப்பட்டு சீனாவில் உள்ள கணிணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான க்ரிப்டோவையர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட வகை ஆண்ட்ராய்ட் போன்கள், பயனாளர்களின் அந்தரங்க தகவல்களை அவர்களது அனுமதி இல்லாமல் அல்லது அவர்களுக்கு தெரியாமல் திருடி, சீனாவில் உள்ள மூன்றாம் நபர் கணினிகளுக்கு அனுப்புகிறது.
Advertisement
இத்தகைய போன்கள் அமெரிக்காவின் பிரபலமான ஆன்லைன் சில்லறை வர்க்க நிறுவனங்களான அமேசான் மற்றும் பெஸ்ட் பை ஆகியவற்றில் கிடைக்கின்றன. மேலும் அமெரிக்காவின் பிரபலமான ஆண்ட்ராய்ட் போன் வகையான ப்ளூ R1 HD போன்களும் இத்தகைய ரகசிய மென்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் சோதனை செய்த போன்களில், ரகசிய மென்பொருளானது 'கமர்ஷியல் பர்ம்வேர் ஓவர் தி ஏர்' (FOTA) என்னும் மென்பொருளின், தரம் உயர்த்தப்பட்ட வடிவத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றை சீனாவிலிருந்து இயங்கும் ஷாங்காய் அடுபஸ் டெக்னாலஜி நிறுவனம் கையாளுகிறது.
இந்த மென்பொருளின் மூலம் பயனாளர்களின் குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், அழைப்பு விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
அடுபஸ் டெக்னாலஜி நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 150 நாடுகளில் 70 சதவீதத்திற்கு மேலான சந்தை பங்குகளுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. டோக்கியோ, தில்லி உள்ளிட்ட இடங்களில் இந்நிறுவனத்திற்கு அலுவலகங்கள் உள்ளன.
அடுபஸ் நிறுவன இணையதள தகவலின் படி, 'கமர்ஷியல் பர்ம்வேர் ஓவர் தி ஏர்' (FOTA) மென்பொருளானது, உலகெங்கும் 400 அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளில் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.