உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் முடிவு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜனவரி 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், அதனை டிரம்ப் ஏற்கவில்லை. இந்தியப் பயணத்தைத் தவிர்த்துவிட்ட டிரம்ப், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த மாதம் 22 முதல் 25-ஆம் தேதி வரை உலகப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அதிபர் டிரம்ப் பங்கேற்க இருக்கிறார். அவருடன் நிதியமைச்சர் ஸ்டீவன், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வர்த்தக அமைச்சர் வில்பர் ரோஸ், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அலெக் அகோஸ்டா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
அமெரிக்காவில் தொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையைக் கொண்டுள்ள டிரம்ப் இந்த மாநாட்டில் பங்கேற்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், இந்த உலகப் பொருளாதார மாநாடு, நான்காவது தொழில் புரட்சிக்காக உலகமயமாதல் கட்டமைத்தல் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. அமெரிக்கச் சந்தையை பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் டிரம்ப், சீனாவுடனும், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக விஷயத்தில் அதிக கெடுபிடி காட்டி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.