கஷோகி படுகொலை விவகாரம்: 18 சவூதி அதிகாரிகளுக்கு ஜெர்மனி தடை
செய்தியாளர் கஷோகி படுகொலை விவகாரம் தொடர்பாக, சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்குத் தடை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
செய்தியாளர் கஷோகி படுகொலை விவகாரம் தொடர்பாக, சவூதி அரேபியாவைச் சேர்ந்த 18 அதிகாரிகளுக்குத் தடை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் திங்கள்கிழமை கூறியதாவது:
துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் கஷோகி படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 18 பேருக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார்.
அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவர், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன.
அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார்.
ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவூதி அரேபியா, 18 நாள்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.
எனினும், அந்தப் படுகொலையில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பில்லை என சவூதி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதில் அவருக்குத் தொடர்புள்ளது என பரவலாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஜெர்மனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.