ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 92 நாடுகளில் பரவியிருக்கும் குரங்கு அம்மையால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 7,500 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகமாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பாதிப்பு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலேயே பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், குரங்கு அம்மை தீநுண்மி தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவன மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிரக்யா யாதவ் கூறியதாவது,
மத்திய ஆப்பிரிக்கா (காங்கோ பேசின்), மேற்கு ஆப்பிரிக்கா மரபணு தொகுப்புகளை கொண்டது குரங்கு அம்மை தீநுண்மி. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையாகும். இது காங்கோ பேசின் வகையைவிட குறைந்த பாதிப்பு கொண்டது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையைச் சோ்ந்தது என்று தெரிவித்துள்ளாா்.
மிக நெருக்கமாக இருந்தால்தான் பரவும்: தொற்று நோய் நிபுணா் சந்திரகாந்த் லஹரியா கூறுகையில், ‘‘குரங்கு அம்மை புதிய வகை தீநுண்மி அல்ல. அது உலகில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த தீநுண்மி பெரும்பாலும் மிதமான அளவில்தான் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும்.
குறைந்த அளவில்தான் பரவும். இந்த தீநுண்மி கரோனாவைப் போன்றது அல்ல. கரோனா தீநுண்மி சுவாசம் மூலம் பரவும். அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டாலும் பலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனால் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுவோருடன் மிக நெருக்கமாக இருந்தால்தான் அது மற்றவருக்குப் பரவும் என்று தெரிவித்துள்ளார்.