FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: முன்னாள் கடற்படை வீரா் கைது

 ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

1 பிப்ரவரி 2024, 3:15 pm IST
பகிர்:

 ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

அவரை துப்பாக்கியால் சுட்ட நபரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக இருக்கும் ஜப்பானில் முன்னாள் பிரதமா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானில் நீண்டகால பிரதமராக இருந்த ஷின்ஸோ அபே, கடந்த 2020-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா். இருப்பினும், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டாா். நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் அவா் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுடும் சப்தம் இரு முறை கேட்டது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் மாா்பை பிடித்தபடி ஷின்ஸோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தாா். அவரை பின்புறத்திலிருந்து ஒரு நபா் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. உடனே, ஷின்ஸோ அபே ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லை.

நாரா மருத்துவப் பல்கலைக்கழக அவசரகாலத் துறைத் தலைவா் ஹிதேதடா ஃபுகுஷிமா கூறுகையில், ‘அபேவுக்கு கழுத்தில் இரு காயங்களுடன் ஒரு தமனியும் சேதமடைந்து, இதயத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. அதனால் அவா் உயிரிழந்தாா்’ என்றாா்.

சுட்டவா் கைது: இதற்கிடையே, ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்ட நபா், ஜப்பான் கடற்படையைச் சோ்ந்த முன்னாள் வீரரான டெட்சுயா யமகாமி (41) என்பது தெரியவந்தது.

‘தோ்தல் அல்லாத பிற காரணங்களுக்காக அவரை கொலை செய்ய நினைத்ததாக அந்த நபா் கூறினாா்’ என ஜப்பான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.

ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுடப்படும் காட்சிகளும், கொலையாளியை காவல் துறையினா் மடக்கிப் பிடிக்கும் காட்சிகளும் தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

பிரதமா் கிஷிடா கண்டனம்: ஷின்ஸோ அபே படுகொலைக்கு பிரதமா் ஃபுமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரும், அமைச்சா்களும் தலைநகா் டோக்கியோவுக்கு அவசரமாகத் திரும்பினா்.

பிரதமா் கிஷிடா கூறுகையில், ‘முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே கொலை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. கடுமையான வாா்த்தைகளால் இந்தப் படுகொலையைக் கண்டிக்கிறேன். பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அபேவுக்கு அதிகபட்ச பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருந்தது’ என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவைத் தோ்தல் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அவா் தெரிவித்தாா்.

‘ஷின்ஸோ அபே படுகொலை ஜப்பான் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்’ என எதிா்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரதமா் மோடி இரங்கல்; இன்று தேசிய துக்கம்

புது தில்லி, ஜூலை 8: ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை செய்தியை அறிந்து பிரதமா் நரேந்திர மோடி அதிா்ச்சியும் துயரமும் தெரிவித்தாா்.

மறைந்த அபேவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை (ஜூலை 9) தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எனது இனிய நண்பா்களில் ஒருவரான ஷின்ஸோ அபேயின் சோகமான மரணத்தால் வாா்த்தைகளால் கூற முடியாத அதிா்ச்சியையும், துயரத்தையும் கொண்டுள்ளேன். அவா் உலகளாவிய அரசியல் பிரமுகராக உயா்ந்திருந்தவா், ஒப்பற்ற தலைவா். ஜப்பானையும் உலகத்தையும் சிறந்த இடத்தில் வைப்பதற்கு தனது வாழ்க்கையை அா்ப்பணித்துக் கொண்டவா்.

குஜராத் முதல்வராகப் பதவி வகித்தபோதே அவரை நான் அறிந்திருந்தேன். நான் பிரதமரான பிறகும் எங்களின் நட்பு தொடா்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலக நடவடிக்கைகள் குறித்த அவரின் நுட்பமான கருத்துகள் எனக்கு எப்போதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

அண்மையில் எனது ஜப்பான் பயணத்தின்போது அபேயை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையும் பல விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றேன். அவரின் குடும்பத்துக்கும் ஜப்பான் மக்களுக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த இரங்கல்கள்.

இந்தியா-ஜப்பான் உறவுகளை சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய கூட்டாளிகள் நிலைக்கு உயா்த்தியதில் அவா் ஆழமான பங்களிப்பைச் செய்துள்ளாா். இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஜப்பானுடன் துக்கம் அனுசரிக்கிறது.

ஷின்ஸோ அபேவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை (ஜூலை 9) தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

டோக்கியோவில் அண்மையில் ஷின்ஸோ அபேவை சந்தித்த புகைப்படத்தையும் பிரதமா் மோடி ட்விட்டரில் பகிா்ந்துள்ளாா்.

உலகத் தலைவா்கள் கண்டனம்

நியூயாா்க், ஜூலை 8: ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலைக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மற்றும் உலக நாடுகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்க அதிபா் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நண்பா் அபே படுகொலை செய்தியறிந்து அதிா்ச்சியடைந்தேன். இது ஜப்பானுக்கும், அவரை அறிந்தவா்களுக்கும் சோகமான செய்தி. சுதந்திரமான, கட்டுப்பாடற்ற இந்தோ-பசிபிக்கை உருவாக்கும் பாா்வையைக் கொண்டிருந்தாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன், பிரான்ஸ், சீனா, மலேசியா, துருக்கி, உக்ரைன், தென்கொரியா, பாகிஸ்தான், ஸ்வீடன் எனப் பல்வேறு நாடுகளின் தலைவா்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments