முகப்பு
உலகம்

குழந்தைக்கு வாங்கிய பர்கரில் ரத்தம்! உணவகம் கொடுத்த விளக்கம்!!

குழந்தை, தனக்கு உணவு வேண்டாம் என அழுதுள்ளது. உணவை ஆராய்ந்ததில், பர்கரில் ரத்தத் துளிகள் இருந்தது தெரியவந்துள்ளது.

Updated On : 28 ஜூலை, 2024 at 11:00 AM
பகிர்:

அமெரிக்காவில் குழந்தைக்காக வாங்கிய பர்கர் மற்றும் உணவில் ரத்தத் துளிகள் தெளிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உணவகத்தின் ஊழியர், பணியின்போது விரலை அறுத்துக்கொண்டதாகவும், அதன் ரத்தத் துளிகள் டெலிவரிக்கு இருந்த உணவில் விழுந்ததாகவும் சம்பந்தப்பட்ட உணவகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி பர்கர் உணவை விரும்பும் பலர் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரைச் சேர்ந்த டிஃப்பானி ஃபுளாயிட் என்ற பெண், தனது 4 வயது மகளுக்காக பர்கர் கிங் உணவகத்தில் பர்கர் உடன் சேர்த்து தனது உணவையும் ஆர்டர் செய்துள்ளார்.

அந்த உணவை குழந்தைக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு இவர் தனது பணிகளைத் தொடர்ந்துள்ளார். குழந்தை, தனக்கு உணவு வேண்டாம் என அழுதுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஃபுளாயிட், உணவை ஆராய்ந்ததில், பர்கரில் ரத்தத் துளிகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதோடு பர்கர் சுற்றப்பட்டிருந்த காகிதத்திலும் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. உடனே குழந்தையிடம் வாயில் இருந்த உணவை துப்ப வற்புறுத்தியுள்ளார் ஃபுளாயிட்.

பர்கர் கொண்டுவரப்பட்ட அட்டைப் பெட்டியிலும் ரத்தத் துளிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதோடு மட்டுமின்றி தனக்கு வாங்கிய உணவையும் பரிசோதித்ததில், அதிலும் ரத்தத் துளிகள் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உணவகத்துக்கு ஃபுளாயிட் தொடர்புகொண்டுள்ளார். உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணியின்போது தனது விரல்களை அறுத்துக்கொண்டதாகவும், அதன் துளிகள் விழுந்திருக்கலாம் எனவும் உணவகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே ஃபுளாயிட், மருத்துவரிடம் தனது குழந்தையை பரிசோதனை செய்துள்ளார். குழந்தையின் ரத்த மாதிரிகளில் ஏதேனும் மாறுதல்கள், நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்காக 30 நாள்கள் தொடர் கண்காணிப்பில் குழந்தை இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், உணவு ஆர்டர் செய்த பணத்தை திரும்ப அளிப்பதாகவும் உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த ஃபுளாயிட், தனது குழந்தை சம்பவம் நடந்ததிலிருந்து எந்தவொரு உணவையும் உண்ண மறுப்பதாகவும், உணவு கொண்டு சென்றாலே பதற்றம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் குழந்தை இயல்புநிலையை அடையும்வரை அதன் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக பர்கர் கிங் அறிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி, சன்போர்ன் நகரில் உள்ள பர்கர் கிங் உணவகத்தை முழுவதுமாக தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு, மாற்று நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணிகள் முடியும் வரை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.