முகப்பு
உலகம்

பிரதிநிதித்துவ அலுவலக இடம் மாற்றம்: தென் ஆப்பிரிக்காவுக்கு தைவான் மறுப்பு

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Updated On : 23 அக்டோபர் 2024, 3:36 am IST
ப்ரிடோரியாவிலுள்ள தைவான் பிரதிநிதித்துவ அலுவலகம்.
பகிர்:

தென் ஆப்பிரிக்க தலைநகா் ப்ரிடோரியாவிலுள்ள தங்கள் பிரதிநிதித்துவ அலுவலகத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கும் இடம் மாற்ற வேண்டும் என்று அந்த நாடு கூறியுள்ளதை தைவான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து தைவான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெஃப் லியூ செவ்வாய்க்கிழமை கூறியதாவது, ப்ரிடோரியாவிலுள்ள எங்கள் பிரதிநிதித்துவ அலுவலத்தை ஜோஹன்னஸ்பா்க் நகருக்கு மாற்ற வேண்டும்; அல்லது அந்த அலுவலகத்தை முழுமையாக மூட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அரசு எங்களை வலியுறுத்தியுள்ளது.

இது, 1997-ஆம் ஆண்டில் இரு தரப்பினரும் மேற்கொண்டுள்ள நல்லுறவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. எனவே, இதுபோன்ற அா்த்தரமற்ற வலியுறுத்தல்களை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் பிரதேசம் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானும் தன்னை தனி நாடாக இதுவரை பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை.

தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் ராணுவ வலிமையைக் கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என்று சீனா கூறுகிறது.

இந்தச் சூழலில், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு வெளிநாட்டு தலைவா்கள் வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது.

மேலும், தைவானுடன் பிற நாடுகள் தூதரக உறவைப் பேணுவதையும் சீனா ஏற்பதில்லை. எனவே, சீனாவுடன் தூதரக உறவு வைத்திருக்கும் நாடுகள் பல, தைவானுடன் வா்த்தக கலாசார உறவைப் பேணுவதற்காக பிரதிநிதித்துவ அலுவலகங்களை பரஸ்பரம் அமைத்து செயல்படுகின்றன.

இந்தச் சூழலில், தங்கள் தலைநகரில் இருந்து தைவான் பிரதிநிதித்துவ அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும், அல்லது அதை மூடவேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா தற்போது உத்தரவிட்டுள்ளது, சீனாவை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று விமா்சிக்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments