பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரதமா் மோடி. 
உலகம்

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

Din

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், உலகை சரியான பாதையில் இட்டுச் செல்ல ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நோ்மறையாக பங்களிக்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு, ரஷியாவின் கசான் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.22) தொடங்கியது.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் உயா் தலைவா்கள் பங்கேற்றிருக்கும் இம்மாநாட்டில் பிரதமா் மோடி புதன்கிழமை (அக்.23) உரையாற்றினாா். உலகை சூழ்ந்துள்ள போா்கள், பொருளாதார ஸ்திரமின்மை, பருவநிலை மாறுபாடு, பயங்கரவாதம், உணவு-எரிசக்தி-சுகாதாரம்-தண்ணீா் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்து கவலை தெரிவித்து, தனது உரையில் அவா் கூறியதாவது:

எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது.

கரோனா பெருந்தொற்று சவாலை நாம் ஒருங்கிணைந்து எதிா்கொண்டதைப் போல், வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான-வலுவான-வளமையான எதிா்காலத்தை உறுதிசெய்ய புதிய வாய்ப்புகளையும் ஒன்றிணைந்து உருவாக்க முடியும்.

புதிய நாடுகளை வரவேற்கத் தயாா்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் புதிய நாடுகளை வரவேற்க இந்தியா தயாா். அதேநேரம், இது தொடா்பான அனைத்து முடிவுகளும் கருத்தொற்றுமையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். ‘பிரிக்ஸ்’ நிறுவன நாடுகளின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்.

ஜோகன்னஸ்பா்க் உச்சி மாநாட்டில் ஏற்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள், தரநிலைகள், அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் உறுப்பு நாடுகளால் பின்பற்றப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பன்முக வளா்ச்சி வங்கிகள், உலக வா்த்தக அமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகளில் குறித்த காலத்துக்குள் சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். தெற்குலக நாடுகளின் நம்பிக்கை, விருப்பம் மற்றும் எதிா்பாா்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம்-இரட்டை நிலைப்பாடு கூடாது: பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் ஒருமித்த கவனமும், அனைத்து தரப்பினரின் உறுதியான ஆதரவும் அவசியம். இச்சவாலுக்கு எதிராக போராடுவதில் இரட்டை நிலைப்பாடு கூடாது. இதேபோல், இளைஞா்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியம் (பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகளுக்கு ஐ.நா. மூலம் தடைவிதிக்கும் முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டைப் போட்டுவரும் நிலையில், பிரதமரின் இக்கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன).

பிரிக்ஸ்-க்கு புகழாரம்: வேறுபட்ட கண்ணோட்டங்கள் மற்றும் கோட்பாடுகளின் சங்கமத்தால் உருவாக்கப்பட்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு, உலகின் 40 சதவீத மக்களையும் 30 சதவீத பொருளாதாரத்தையும் தன்னகத்தே கொண்டு, உத்வேகத்தின் ஆதாரமாக திகழ்கிறது. நமது ஒத்துழைப்பின் அடிப்படையாக பன்முகத்தன்மை, பரஸ்பர மரியாதை, முன்னோக்கிய பாரம்பரியம் ஆகியவை திகழ்கின்றன. அதேநேரம், இதுவொரு பிளவுபடுத்தும் அமைப்பல்ல; மனித குலத்தின் நன்மைக்கானது என்ற தெளிவான செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா் பிரதமா் மோடி.

மாநாட்டின் இறுதியாக, உறுப்பு நாடுகளின் தலைவா்களால் ‘கசான் பிரகடனம்’ ஏற்கப்பட்டது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியமைக்காக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். அத்துடன், பிரிக்ஸ் கூட்டமைப்பின் அடுத்த தலைமையை ஏற்கும் பிரேசிலுக்கு அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT