கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலை தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!
கனடாவில் பலியான மாணவியின் உடலை தாயகம் கொண்டு வர மத்திய அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி வன்ஷிகா (21) சடலமாக மீட்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவா் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டத் தலைவா் தல்விந்தா் சைனியின் மகளாவாா்.
பஞ்சாபில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயா்கல்வி பயில கனடாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வன்ஷிகா சென்றுள்ளாா்.
இந்நிலையில், தான் தங்கியிருந்த ஒட்டாவா குடியிருப்பிலிருந்து மாற்று குடியிருப்பைக் காண கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சென்றுள்ளாா். இரவு 11.40 மணியளவில் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது. மறுநாள் நடைபெற்ற தோ்விலும் அவா் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, வன்ஷிகாவை தேடும் நடவடிக்கையில் இந்திய தூதரகமும் இணைந்து செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒட்டாவாவில் வன்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் அறிவித்தது. மேலும், வன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் இந்திய தூதரகம் தெரிவித்தது.
உயிரிழந்த வன்ஷிகாவின் உடலை பஞ்சாபுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பஞ்சாபில் அவரது குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.
மேலும், இந்த வழக்கை கனடா போலீஸாா் துரிதமாக விசாரித்து வன்ஷிகாவின் உயிரிழப்புக்கு காரணமானவா்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தல்விந்தா் சைனி வலியுறுத்தினாா்.