மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்து...
மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இம்ரான் கானின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அந்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் போராட்டம் கலவரமாக உருமாறி லாஹூரில் அமைந்திருந்த ராணுவத் தளவாடங்களும் அதிகாரிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவத்தில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியான தெஹ்ரிக்-இ-இன்சாஃபின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க வேண்டுமென கடந்த 2024-ம் ஆண்டு இம்ரான் கான் தரப்பில், லாஹூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
அதை எதிர்த்து, அவர் மீண்டும் லாஹூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃப்ரிடி, சித்திக்கி மற்றும் மியாங்குவல் ஔரங்கசீப் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஆக.21) நடைபெற்றது. இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, தேசியளவில் அவரது ஆதராவளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, தெஹ்ரிக் -இ - இன்சாஃப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுஃபிகார் புகாரி கூறுகையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலைக்கு, இன்னும் ஒரே ஒரு வழக்கில் மட்டும் பிணைக் கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியிலுள்ள அடியால சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?
Pakistan's Supreme Court has granted bail to former Prime Minister Imran Khan in the May 9 riots case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.