பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறையில் உரிமைகள் மறுப்பு!
சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமருக்கு சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமருக்கு சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சட்டரீதியான அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படுவதாக கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
முறையான மருத்துவ வசதிகள் கூட இருவருக்கும் மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பல்வேறு வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவரது மனைவி புஷ்ரா பீவி வீட்டுச் சிறையில் இருந்த நிலையில், 2024 மே முதல் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முக்கிய தலைவரும் கைபர் பக்துன்வா மாகாண அமைச்சருமான ஷஃபி ஜன் இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில், “இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியும் உறவினர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.
கண் பாதிப்பால் கடந்த 4 மாதங்களாக இம்ரான் கான் அவதிப்பட்டு வருகிறார். அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது சிறை விதிகளை மீறும் செயல். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விவரங்கள் எதுவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ பகிரப்படவில்லை.
அவர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். முழுமையான பரிசோதனைக்கு உடனடியாக ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்படவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
கட்சியின் நிறுவனரான இம்ரான் கானுடனான சந்திப்புகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அரசு தொடர்ந்து இம்ரான் கானைச்சந்திக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது நீதித்துறை உத்தரவுகளை அவமதிப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்..