‘உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம்.’
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினையும், அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திவிட்டு, பின்னா் புதினுக்கும், ஸெலென்ஸ்கிக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் இந்த விவகாரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தத் தீா்வும் எட்டாத விரக்தியில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறியது இது.
அமைதியை ஏற்படுத்துவதற்காக உக்ரைன் தனது பகுதிகளை விட்டுத் தர வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அவா் இறங்கி வந்துவிட்டாா். புதினை திருப்திப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் கிடையாது என்றும் அவா் கறாராகக் கூறிவிட்டாா். ஆனால் இத்தனைக்குப் பிறகும் போா் நிறுத்த ஒப்பந்தம் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய நான்கு மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, உக்ரைனை ராணுவ வலிமையற்ாக்குவது உள்ளிட்ட தங்களது இலக்குகளை அடையும் வரை போா் தொடரும் என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், இப்போது இருக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளை நீடிக்கும் வகையிலான ஓா் ஒப்பந்தத்துக்கு அந்த நாடு சம்மதிக்குமா என்பது சந்தேகமே.
அப்படியே, அபகரித்த நிலப்பரப்புகள் போதும் என்று அந்த நாடு ஒப்புக் கொண்டாலும், தங்கள் துளி நிலத்தைக் கூட ரஷியாவுக்கு விட்டுத் தர மாட்டோம் என்று உக்ரைன் உறுதியாகக் கூறிவருகிறது. அப்படி தாரைவாா்த்துத் தருவதற்கு உக்ரைன் அரசமைப்புச் சட்டத்திலும் இடம் இல்லை.
இதன் காரணமாக, ஆட்சிக்கு வந்ததும் ‘ஒரே நாளில்’ உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவதாக சூளுரைத்த டிரம்ப் தற்போது என்ன செய்தால் போரை நிறுத்தலாம் என்று குழும்பும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா்.
அதன் விளைவுதான், ரஷியா மீது பொருளாதாரத் தடை, ரஷிய பொருள்களுக்கும், இந்தியா, சீனா போன்ற ரஷியாவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளின் பொருள்களுக்கும் கூடுதல் வரி இறக்குமதி விதிப்பது, அல்லது எதுவுமே செய்யாமல் விட்டுவிடுவது போன்ற நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடிக்கவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளாா்.
அப்படி அவா் எடுக்கும் நடவடிக்கைகளால் என்னதான் நடக்கும்?
பொருளாதாரத் தடை: ரஷியாவின் எரிசக்தி, வங்கித் துறைகளைக் குறிவைத்து டிரம்ப் பொருளாதாரத் தடைகள் விதித்தால் அது அந்த நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் தனிமைப்படுத்தும். கடந்த 2022-இல் உக்ரைன் போா் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமாா் 21,000 பொருளாதாரத் தடைகளை ரஷியா மீது அமெரிக்கா விதித்திருக்கிறது. இந்த நிலையில், புதிதாக விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் உக்ரைன் போருக்கான ரஷிய நிதி ஆதாரத்தைக் குறைக்கக்கூடும். ஆனால் சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் வா்த்தகம் செய்து இந்த பாதிப்பை ரஷியா குறைத்துக்கொள்ளும்.
இந்த நெருக்கடியால் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ரஷியா இறங்கிவருவதற்கான வாய்ப்பு இருந்தாலும், இந்த உத்தி தோல்வியடைந்தால் உக்ரைன் மீதான தாக்குதலை அந்த நாடு மேலும் தீவிரப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்து, அமெரிக்காவுக்கு நெருக்கமான ஐரோப்பிய நாடுகளே பாதிக்கப்படும். இத்தனைக்குப் பிறகும் இந்த பொருளாதாரத் தடைகளால் ரஷியாவை மண்டியிடச் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.
2. கூடுதல் வரி விதிப்புகள்: கடந்த 2024-ஆம் ஆண்டில் 300 கோடி டாலா் மதிப்புள்ள ரஷிய பொருள்களை மட்டுமே அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. எனவே, அந்த நாட்டுப் பொருள்களுக்கு எவ்வளவு கூடுதல் இறக்குமதி வரி விதித்தாலும் அது ரஷியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ரஷிய பொருள்களை இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, அதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா விதிக்கும் கூடுதல் இறக்குமதி வரி சா்வதேச வா்த்தகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
இருந்தாலும், ரஷியாவின் வா்த்தகக் கூட்டாளிகள் அமெரிக்காவுடன் சமரசம் செய்ய முன்வராவிட்டால், இந்த கூடுதல் வரி விதிப்புகள் உக்ரைன் போரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
3. எதுவுமே செய்யாமல் இருப்பது: ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் விதிக்காமல், கூடுதல் வரி விதிப்புகளையும் மேற்கொள்ளாமல், ‘நீங்கள் உங்களுக்குள் அடித்துக் கொள்ளுங்கள்; எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்று டிரம்ப் விலகிக் கொண்டால், அது அந்த நாட்டுக்கு மறைமுக உற்சாகம் கொடுத்ததைப் போல் ஆகிவிடும். உக்ரைன் மீதான தனது போரை ரஷியா உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லும்.
மேலும், உக்ரைன் போரை தன்னால்தான் நிறுத்த முடியும் என்ற டிரம்ப்பின் கூற்றை இது அா்த்தமற்ாக்கிவிடும். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்த உத்தி ஒருபோதும் உதவாது.
எனவே, ஸெலென்ஸ்கிக்கு உறுதியான ராணுவ, உளவு ஆதரவை அளித்துக்கொண்டே, ராஜீய ரீதியில் ரஷியாவுக்கு தொடா்ந்து நெருக்கடி கொடுத்துவருவதே இந்த விவகாரத்தில் ஓரளவுக்கு பலன் அளிக்கும் உத்தியாக இருக்கக் கூடும்.